தமிழ்நாடு

tamil nadu

தொடரும் மாணவ வன்முறை: சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்?

By

Published : Aug 21, 2023, 4:38 PM IST

Chennai Gurunanak College issue: குருநானக் கல்லூரி மாணவர்களிடையே கானா பாடல் பாடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலா
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலா

சென்னை:வேளச்சேரியில் இயங்கிவரும் குருநானக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 21) காலை 10 மணியளவில் ஒரே கல்லூரியை சேர்ந்த வெவ்வேறு பட்டப்படிப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கிண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் கிண்டி போலீசார் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோதலில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இந்நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

பின்னர், வெடிக்காமல் இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்த வெடிகுண்டு நிபுணர்கள், அது நாட்டு வெடிகுண்டு இல்லை என்பதும் சவ ஊர்வலத்தில் வெடிக்கப்படும் பட்டாசு என்பதும் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிடிபட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூன்றாம் ஆண்டு படிக்கும் பி.ஏ பொருளாதாரம் (B.A Economics) மற்றும் பி.ஏ டிபன்ஸ் (B.A Defence) ஆகிய இரு தரப்பு மாணவர்களுக்குள் சில நாட்களாக மோதல் நிலவி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை கேண்டீனில் ஒரு தரப்பு மாணவர்கள் கானா பாடல் பாடி கிண்டல் செய்து கொண்டிருந்த போது இரு தரப்பு மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலின் போது திடீரென ஒரு தரப்பை சேர்ந்த மாணவர் பையிலிருந்து நாட்டு வெடிகுண்டை போல சுற்றி கொண்டு எடுத்து வந்த பட்டாசை கொளுத்தி தூக்கி வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மது அருந்த பணம் கேட்டு டார்ச்சர்... மகனை அடித்துக் கொன்ற தாய்!

அதில் ஒரு பட்டாசு மட்டும் வெடித்து மற்றவை வெடிக்காமல் போனதும் தெரியவந்துள்ளது. மேலும் எதிர் தரப்பு மாணவர்களை அச்சமடைய செய்வதற்காக பட்டாசை, நாட்டு வெடிகுண்டு போல சுற்றி வீசியதாக மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை கிண்டி காவல்துறையினர் கைது செய்து, இது தொடர்பாக மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது எனவும் இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்தானா அல்லது வேறு ஏதும் பின்னணியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

சமீப காலமாக தமிழகத்தில் படிக்கும் மாணவர்கள் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக நாங்குநேரி சம்பவம் , தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களிடயே ஏற்பட்ட சாதிய வன்முறை மற்றும் தற்போது கல்லூரி மாணவர்களிடயே ஏற்பட்ட மோதலால் வெடிகுண்டு தாக்குதல் போன்ற சம்பவங்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களை வன்முறை அற்றவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. டெல்லி அரசு அதிகாரி பணியிடை நீக்கம்.. முதலமைச்சர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details