தமிழ்நாடு

tamil nadu

“ஆங்கில புத்தாண்டு பரிசா?” ஆவின் பால் விலை, அளவு மாற்றத்திற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 12:14 PM IST

Updated : Jan 3, 2024, 12:47 PM IST

Aavin Milk Price Increase: ஆவின் டிலைட் மற்றும் டயட் ரக பால் பாக்கெட்டுகளின் அளவு, விலை மாற்றத்திற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

strong condemnation of changes in aavin milk quantity and price
ஆவின் பால் அளவு மற்றும் விலையில் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்

சென்னை:ஆவின் டிலைட், டயட் ரக பால் பாக்கெட்டுகளின் அளவு மற்றும் விற்பனை விலை மாற்றத்திற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வரலாறு காணாத தொடர் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கூட, உபத்திரம் செய்யக்கூடிய வகையில் லிட்டருக்கு 200% வரை பால் விற்பனை விலையை உயர்த்தி ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆவின் நிர்வாகம் சத்தமின்றி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இயற்கை பேரிடரால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில் துறை சார்ந்த அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே பால் விற்பனை விலை உயர்வை ஆவின் நிர்வாகம் துணிச்சலோடு அமல்படுத்தியுள்ள போதும் அதுகுறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடாமல் மனோ தங்கராஜ் அமைதி காப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

குறிப்பாக பால் பாக்கெட்டுகள் விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு சில்லறை பிரச்னை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக என்கிற காரணத்தைக் கூறி 3.5% கொழுப்பு சத்துள்ள ஆவின் டிலைட் பால் 180 மி.லி பாக்கெட்டில், பெயருக்கு 10 மி.லி அளவைக் கூடுதலாக்கி விட்டு, அதன் விற்பனை விலையை 9.50-லிருந்து 10 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

மேலும், கூடுதலான 10 மி.லி அளவுள்ள பால் பாக்கெட்டிற்கு 0.50 காசுகள் உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளதோடு, பால் முகவர்கள், சில்லறை வணிகர்களின் பால் பாக்கெட் விற்பனைக்கான லாப தொகையை 0.90 காசுகளில் இருந்து 0.50 காசுகளாக குறைத்து, பால் முகவர்களின் வயிற்றிலும் அடித்திருக்கிறது ஆவின் நிர்வாகம்.

அதுமட்டுமின்றி 1.5% கொழுப்பு சத்துள்ள 250 மி.லி ஆவின் டயட் பால் பாக்கெட்டில் 10 மி.லி அளவை குறைத்து ரூபாய் 10.25 எனும் விற்பனை விலையில் இருந்து 240 மி.லி பாக்கெட்டிற்கு 10 ரூபாயாக விற்பனை விலையை மாற்றி அமைத்துள்ளது.

மேலும், இத்தனை ஆண்டுகாலம் பால் பாக்கெட்டுகள் விற்பனையின் போது வாடிக்கையாளர்களுக்கு சில்லறை பிரச்சினை ஏற்படுவதை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, தற்போது தான் ஞானோதயம் வந்தது போல, பால் விற்பனை விலை உயர்வுக்கான காரணத்தைக் கூறியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள், ஆடு நனைவதாக ஓநாய் அழுத கதையை நினைவூட்டுவதாகவே இருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு ஒன்றியங்களின் பொதுமேலாளர்கள் எந்த ஒரு அரசாணையும் இல்லாமல், ஆவின் பாலின் வகைகளை அவரவர் விருப்பத்திற்கேற்ற மாற்றியமைத்து கொண்டிருந்த சூழலில், தற்போது பால் பாக்கெட்டுகளின் எடையளவு மற்றும் விற்பனை விலையையும் மாற்றி அமைக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மாறியுள்ளனர்.

தங்களைத் தாங்களே சர்வ வல்லமை பொருந்தியவர்களாகக் கருதிக் கொண்டு செயல்பட்டு வரும் வேளையில், தமிழக அரசு அவர்களுக்கு இனியும் கடிவாளம் போடாமல் தொடர்ந்து மெத்தனமாகவே இருக்குமானால், அதற்கான பரிசினை பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிப்பார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலின் வகைகள், பாக்கெட்டின் எடையளவு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை என அனைத்தும் ஒரே சீரான அளவில் இருக்கும் வகையில் நிர்ணயம் செய்து, முறையாக அரசாணை வெளியிட்டு அமுல்படுத்த வேண்டும்.

அதனை மீறி செயல்படுகின்ற மாவட்ட ஆவின் பொது மேலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” என நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு பெருமை' - நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Last Updated : Jan 3, 2024, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details