சென்னை: ஆலந்தூரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை (CISF-Central Industrial Security Force) வீரர்களின் வளாகம் உள்ளது. அங்கு உதவி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் குல்தீப்சிங் (53). இவரோடு தங்கியிருந்தவர், கான்ஸ்டபிளாக பணிபுரியும், காஷ்மீரைச் சேர்ந்த வினோத் குமார் (28).
இந்த நிலையில், வினோத் குமார் சொந்த ஊரில் உள்ள தனது மனைவிடம் பேசுவதற்கு குல்தீப் சிங்கின் செல்போனை அவ்வப்போது வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும், அந்த சமயத்தில் குல்தீப் சிங் தனது போனுக்கு வைத்துள்ள 'பேட்டர்ன் லாக்' என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை (password) வினோத் குமார் அறிந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக குல்தீப் சிங் இரவு நேர பணிக்காக செல்லும் சமயங்களில் வினோத் குமார் குல்தீப் சிங்கினுடைய செல்போனையும் மற்றும் ஏடிஎம் கார்டையும் எடுத்து, வங்கி ஆப் மூலமாகவும், ஏடிஎம் கார்டு மூலமாகவும் குல்தீப் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 21ஆம் தேதி வரையிலும் வினோத் குமார், குல்பீர் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து மொத்தமாக 4,39,000 ரூபாயை எடுத்துள்ளார். மேலும் அதனை தன் மனைவியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.