தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பண்டிகை: நாளை முதல் 19,484 சிறப்பு பேருந்துகள்; எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து புறப்படும்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:47 AM IST

Pongal Special Bus: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 19,484 பேருந்துகள் திட்டமிட்டப்படி இயக்கப்படுகிறது.

pongal special bus
பொங்கல் திருநாளை முன்னிட்டு 19,484 சிறப்பு பேருந்துகள் நாளை(ஜன.12) திட்டமிட்டப்படி இயக்கம்

சென்னை:பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஏற்கனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த, முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மாதவரம் பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள் (12/01/2024 முதல் 14/01/2024 வரை) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் 05 கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் 05, MEPZ (தாம்பரம் சானிடோரியம்) 01 என மொத்தமாக 11 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.

முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களின் நலனை முக்கியமாகக் கருதி, போராட்ட ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் எனவும், போராடிய ஊழியர்களின் மீது துறைரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என தெரிவித்து நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

அந்த வகையில் நாளை(ஜன.12) திட்டமிட்டப்படி சிறப்பு பேருந்துகள் இயங்கும் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கவும், பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:வேலூர் விஐடியில் ‘கிராமத்தில் ஒரு நாள்’ பொங்கல் விழா கோலாகலம்!

ABOUT THE AUTHOR

...view details