தமிழ்நாடு

tamil nadu

பிளாஸ்டிக் கூடைகளில் வந்த பாம்புகள்.. விமான நிலையத்தில் பரபரப்பு...

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 6:26 PM IST

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை உயிரினங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

snake
விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

சென்னை:தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று (செப்.14) அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த பயணி ஒருவர் 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகளை எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணை நடத்தினர். அந்தக் கூடைகளுக்குள் என்ன இருக்கிறது? என்று கேட்டனர். அதற்கு பயணி சரியாகப் பதில் அளிக்காமல், கூடைக்குள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருப்பதாகக் கூறினார்.

ஆனால், சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் கூடைகளைத் திறந்து பார்த்து சோதனை செய்தனர். கூடைகளுக்குள் உயிருடன் கூடிய பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சுங்க அதிகாரிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

பாம்புக் குட்டிகளை கூடைக்குள் வைத்து கடத்தி வந்த பயணி இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பாம்புகள் ரப்பர் பாம்புகள் போல் விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி பாம்பு குட்டிகளை எடுத்து தனது உள்ளங்கைகளில் வைத்து காட்டினார்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் பாம்பு குட்டிகளை ஆய்வு செய்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார், அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 15 பாம்பு குட்டிகள் இருந்தன. அதோடு ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகமாக காணப்படும் அரிய வகை அணில் ஒன்றும் இருந்தது.

அந்த 15 பாம்பு குட்டிகளும் ‘பால் பைத்தான்’ எனப்படும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள். இந்த மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் குளிர் பிரதேசங்களில் இருக்கக்கூடியவைகள்.

இந்த பாம்பு குட்டிகள் விஷமற்றவை. ஆனாலும் ஆபத்தானவை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதைப்போல் அரிய வகை அணில் குட்டி ஆப்பிரிக்க கண்டத்தில் அடர்ந்த காடுகளில் வசிக்கக் கூடியவை. அது சுமார் ஒன்றரை அடி நீளம் வரை வளரக்கூடியது.

பின்னர், ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் இந்த பாம்பு குட்டிகள், அணில் ஆகியவற்றை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பயணி கூறியதாவது, ‘விஷமற்ற இந்த வகை பாம்பு குட்டிகள் வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து இங்கு சில வாரங்கள் வளர்த்து ஓரளவு பெரியதாக மாறியதும் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவோம். இந்த பாம்புகளை வாங்குவதற்கு என்று சிலர் இருக்கின்றனர்.

இந்த பாம்புகளை பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றனர். சில பெரிய பணக்காரர்கள் பங்களாக்களில் மீன் தொட்டிகள் வைத்து வளர்ப்பது போல் பாம்பு குட்டிகளையும் தொட்டிகளில் வைத்து வளர்க்கின்றனர். அதைப்போல் இந்த அரிய வகை அணிலை சர்க்கஸ் கம்பெனிகள் அதிக விலைக்கு வாங்குவார்கள்’ என்று கூறினார்.

பாம்புக் குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் இந்த பாம்புகளில் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவைகளை நமது நாட்டுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய் கிருமிகள் பரவி, உயிரினங்கள் உள்ளிட்ட விலங்குகள், மனிதர்களுக்கும் பல்வேறு புதிய வகை நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது. எனவே இதை எந்த நாட்டில் இருந்து வந்ததோ? அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு துறை போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்தனர். அதோடு இந்த 15 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும் அரிய வகை அணிலையும் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதற்கான விமான செலவுகள் அனைத்தையும் கடத்தல் பயணியிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details