தமிழ்நாடு

tamil nadu

துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்! ஷூக்குள் வைத்து 2 கிலோ தங்கம் கடத்த முயற்சி! ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 12:18 PM IST

Chennai airport: துபாயில் இருந்து தனியார் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கப பசை பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 2 கிலோ தங்கப பசை பறிமுதல்

சென்னை:சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (அக் 31) இரவு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறைக்குள் சென்ற சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் வெங்கடேஸ்வரன் (வயது 30), மதிநுல்லா (வயது 28) ஆகிய இருவரும் நீண்ட நேரமாக கழிவறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை கண்காணித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இருவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்படுபட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் அதிகாரிகள் விசாரித்த போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்து மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேரையும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, முழுமையாக சோதனை செய்து உள்ளனர்.

அப்போது இருவரும் அணிந்து இருந்த ஷூ, சாக்ஸ்க்குள் மறைத்து வைத்து இருந்த 8 பார்சல்களை வீரர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதிலிருந்த ஒரு கிலோ 902 கிராம் ஏறத்தாழ 2 கிலோ தங்க பசைகள் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது . அதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 25 லட்ச ரூபாய் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதோடு விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்த, இலங்கையைச் சேர்ந்த முகமது குதாஸ் (வயது 36) என்ற பயணி தங்கப் பசையை கடத்தி வந்தது தெரியவந்தது.

அப்போது அவர் கொண்டு வந்த பார்ஸலை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இருவரும் வாங்கிக் கொண்டு, விமான நிலைய கழிவறைக்குள் சென்று தங்களுடைய ஷூ சாக்ஸ் காலுறைக்குள் மறைத்து வைத்துவிட்டு சுங்கச் சோதனை இல்லாமல் அந்த தங்கப் பசையை வெளியில் எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து மற்றொரு விமானத்தில், இலங்கைக்கு தப்பி செல்ல இருந்த தங்கப்பசையை கடத்தி வந்த பயணி முகமது குதாஸ் என்பவரையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர். அதன்பின்பு மூன்று பேரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பசையையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடம் ஒப்படைத்தனர்.

சுங்க அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தங்கத்தையும் பறிமுதல் செய்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் கடத்தி வரப்படுவதும், கடத்தல் தங்கம் சுங்கச் சோதனை இல்லாமல் விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் உதவியுடன், எடுத்துச் செல்லப்படுவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர்.. நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details