தமிழ்நாடு

tamil nadu

மேடை நாடகம் தொடங்கி திரையுலகம் வரை: கருணாநிதியின் கலைப்பயணம்

By

Published : Jun 3, 2021, 8:02 AM IST

கலைஞர், முத்தமிழ் அறிஞர் என்று அவரை நேசிக்கும் மக்களால் புகழப்படும் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் இன்று. அவரது கலைப் பயணம் குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பு.

kalaignar karunanithi
கலைஞர்

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூருக்கு அருகே உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3ஆம் தேதி, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் மு. கருணாநிதி. பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையும் மன உறுதியும்கொண்ட இவர், நாடகம், கவிதை, சொற்பொழிவு எனத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

மேடை நாடகம் தொடங்கிய பயணம்

1941இல் வெளியான மாணவ நேசன் மாத இதழையும், தமிழ் மாணவர் மன்றத்தையும் நடத்திவந்த அவர், நாடகம் எழுதுவதில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். 1944ஆம் ஆண்டு முதன்முதலில் அவரால் எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகம் 'பழனியப்பன்'.

சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதி

இதனைத்தொடர்ந்து 1947ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படத்தில் முதன்முதலில் வசனம் எழுதி, தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய கருணாநிதியை, ஒரு சினிமா வசனகர்த்தாவாக உச்சத்திற்குக் கொண்டுசென்ற படம் 'பராசக்தி`.

எம்.ஜி.ஆருடன் கருணாநிதி

வசனங்களில் புரட்சி ஏற்படுத்திய பராசக்தி

கருணாநிதியின் சிந்தனையோட்டம், எழுத்தாற்றலால் வெளிவந்த பராசக்தி படத்தில் இடம்பெற்ற, 'சிங்கத் திருநாடே, நீ சிலந்திக் காடாக மாறியது எப்போது?', 'வந்தாரை வாழவைக்கும் வளமிகு தமிழகமே... நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?', 'நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக', 'பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல; பக்தி, பகல் வேஷமாகிவிட்டதைக் கண்டிப்பதற்காக' போன்ற வசனங்கள், கதைக்காக படம் என்று இருந்த நிலையை மாற்றி, வசனத்திற்காகப் படம் என்ற நிலையை தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தின.

சிவாஜியும் கருணாநிதியும்

பராசக்தி படம் மூலம் திரைக்கதையிலும் வசனங்களிலும் பல புதுமைகளையும் புரட்சிக் கருத்துகளையும் புகுத்தி, வித்தியாசமான கோணத்தில் ஆழ்ந்த சிந்தனை, சமூக அவலம், ஆட்சியாளர்களின் அலட்சியம், அதிகார வர்க்கத்தின் மமதை, ஏழை, எளிய மக்கள் படும்பாடு என்று அனைத்தையும் தனது வீரியமிக்க வசனங்களால் சாடி திருப்புமுனையை ஏற்படுத்தினார் கருணாநிதி.

புத்தகம் வடிவம் பெற்ற மனோகரா

மந்திரி குமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் அவரது வசனங்களுக்காகவே பெரும் புகழைப் பெற்றன. முதன்முதலில் ஒரு சினிமா, கதை, வசனம் புத்தகமாக வெளிவந்தது என்றால் அது கருணாநிதி வசனத்தில் வெளிவந்த 'மனோகரா' படத்திற்குத்தான். அந்தப் புத்தகம் விற்பனையிலும் பெரும் சாதனைப் படைத்தது.

சினிமா வசனகர்த்தாவாக மாறிய கருணாநிதி

சாதனையில் திரைப்பாடல்கள்

வசனங்கள் தாண்டி, 'காகித ஓடம் கடல் அலை மீது' உள்ளிட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

கருணாநிதி, அண்ணா, எம்ஜிஆர், பெரியார் ஒன்றிணைந்த தருணம்

திரையுலகில் கதாசிரியர், வசனகர்த்தா, கவிஞர் எனப் புகழ்பெற்ற கருணாநிதி, ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் ஆகிய திரைப்படங்களையும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பராசக்தி, மனோகரா ஆகிய படங்களையும் வெற்றிப் படங்களாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர் ஆவார்.

150-க்கும் மேற்பட்ட நூல்களுக்கு சொந்தக்காரர்

சினிமாவுக்கு வசனம் மட்டுமே எழுத வந்து, பின்னாளில் கதை, திரைக்கதை, வசனம், பாடல் ஆசிரியர் எனப் பன்முக வித்தகராக விளங்கிய கருணாநிதி, 1947ஆம் ஆண்டில் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011இல் வெளியான பொன்னர் - சங்கர் வரை, 64 ஆண்டுகள், சுமார் 69 படங்களில் தமிழ்த் திரையுலகின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

மகன் ஸ்டாலினுடன் கருணாநிதி

150-க்கும் மேற்பட்ட நூல்களுக்குச் சொந்தக்காரர்

இவை தவிர, ’ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்னும் தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதியும் வந்தார். சங்கத் தமிழ், தொல்காப்பிய உரை, கலைஞரின் கவிதை மழை, 10 சமூக நூல்கள், ஆறு சரித்திரப் புதினங்கள், இனியவை இருபது என்ற பெயரில் பயண நூல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய கருணாநிதி, 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்தார்.

மு. கருணாநிதி என்னும் நான்!

அரசியல் உலகில் பயணித்த அதே வேளையில் கலை உலகத்திலும் தனது உடல்நலம் குன்றும் இறுதிக்காலம் வரை பெரும் பங்காற்றி மறைந்தும் சமூகத்தில் தான் ஏற்படுத்திய தாக்கத்தால் மறையாமல் உயிர்ப்போடு இருக்கும் கருணாநிதியின் சேவை அளப்பரியது; போற்றத்தக்கது. எழுத்துலகம், படைப்புலகம், பத்திரிகைத் துறை சார்பில் ஈடிவி பாரத்தின் பிறந்தநாள் வாழ்த்துகள் #FatherofModernTamilnadu

ABOUT THE AUTHOR

...view details