தமிழ்நாடு

tamil nadu

எண்ணூர் எண்ணெய் கழிவால் பல்வகை உயிரினங்கள் பாதிப்பு.. பெலிக்கான் பறவைகளுக்கு மறுவாழ்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 5:29 PM IST

Oil spill affect birds: எண்ணூர் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட பறவைகள் மீட்கப்பட்டதை அடுத்து, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வைத்து, அவற்றின் மீது படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

எண்ணெய் படிந்த பறவைகளுக்கு மறுவாழ்வு
எண்ணெய் படிந்த பறவைகளுக்கு மறுவாழ்வு

பெலிக்கான் பறவைகளுக்கு மறுவாழ்வு

சென்னை:சென்னை எண்ணூர் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் எதிரொலியால், அதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் எண்ணூர் பகுதியில் இயங்கி வந்த மத்திய அரசின் சிபிசிஎல் நிறுனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கழிவுகள், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது.

இந்த எண்ணெய் கழிவுகள் வங்கக்கடலில் சங்கமிக்கும் இடமான எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவி, மீனவர் குடியிருப்பு பகுதிகளான நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்து கடலில் கலந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள், வலைகளில் எண்ணெய் கழிவுகள் படிந்தன.

மேலும் ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தது மட்டுமின்றி, அப்பகுதியில் இருக்கும் அலையாத்தி காடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வலசைக்கு வந்த பறவைகளும், இந்த எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை.. வேலூர் கொசப்பேட்டை மக்கள் அச்சம்!

இந்த எண்ணெய் கழிவால் கொசஸ்தலை ஆறு மற்றும் அலையாத்தி காடுகளில் உள்ள ஏராளமான பறவைகளும் பாதிக்கப்பட்டன. அதன் இறக்கைகளில் எண்ணெய் படர்ந்து பறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், எண்ணெய் கசிவுகளால் பாதிக்கப்பட்ட பறவைகள் முகத்துவாரப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டன. ஆனால், பத்துக்கும் மேற்பட்ட பறவைகள் எண்ணெய் படலம் படர்ந்து, பறக்க முடியாமல் அவதிபட்டுள்ளன.

முக்கியமாக, இரை தேடி எண்ணூர் முகத்துவாரத்துக்கு வரும் பறவைகள் அனைத்தும் வேட்டையாடி உண்ணக் கூடியவை என்பதால், அவற்றுக்கு வேகம் அவசியம். பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படியும்போது, பளு அதிகமாகி அவற்றால் வழக்கமான வேகத்தில் பறக்க முடியாததோடு, இரைக்காக வேட்டையாடவும் முடியாது. மேலும் நீரில் நீந்தி செல்லவும் சிரமப்படும் என பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பல தன்னார்வலர்கள் அமைப்பும், வனத்துறையும் இணைந்து, முதற்கட்டமாக எண்ணூரில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பெலிக்கான் (கூழைக்கடா) பறவைகளை, சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் வைத்து, அவற்றின் மீது படிந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பறவைகளின் இறக்கைகளில் இருந்த எண்ணெய் படலமானது, தற்போது பிரஷ் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் பறவைகளின் ரத்த மாதிரிகளை எடுத்து, அதற்கு ஏதாவது நோய் தாக்கி உள்ளதா அல்லது இந்த எண்ணெய் கழிவுகளால் உடல் நல பிரச்னை ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இயற்கையையும் விட்டு வைக்காத மிக்ஜாம் புயல்; பாதிக்கப்படும் பள்ளிக்கரணை..! வில்லனாகும் வீராங்கல் ஓடை!

ABOUT THE AUTHOR

...view details