தமிழ்நாடு

tamil nadu

76வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை - சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது!

By

Published : Aug 4, 2023, 12:45 PM IST

76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தொடங்கியது.

independence day parade
76–வது சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தின விழா, ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான முதல் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சியானது இன்று (ஆகஸ்ட் 4) காலை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது காமராஜர் சாலையில் நடைபெற்றது.

முதலில், முதலமைச்சரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அவரது இல்லத்திலிருந்து அழைத்து வருவது போன்ற ஒத்திகையானது மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப் பிரிவினர் பங்கேற்கும் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியை ஏற்றுவது போன்ற ஒத்திகையும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறை சார்ந்த விருதுகளை முதலமைச்சர் வழங்குவது போன்ற நிகழ்வுகளும் ஒத்திகையாக நடத்தப்பட்டது. இறுதியாக, விருது பெற்றவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படத்தை எடுத்துக் கொள்வது போலவும், அவ்வப்போது விருது பெற்றவர்கள் எப்படி செயல்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுரையாக வழங்கப்பட்டது. மேலும், 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல் ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10 மற்றும் 13ம் தேதிகளில் மறு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மேலும், சுதந்திர தின விழாவிற்காக மேடைகள் அமைக்கும் பணிகள், தலைமைச் செயலகம் எதிரில் உள்ள பூங்காவில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 76வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்ற நேரத்தில், காலை 6 மணியில் இருந்து நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை மற்றும் போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை ஆகிய சாலைகளும், மேலும் கொடி மரச் சாலைகளிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று முடியும் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு டீ கப் பயன்படுத்திய விவகாரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details