கரோனா தொற்றால் பரிசோதனை, நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அறிவிப்பு, வீட்டு தனிமைப்படுத்துதல், கரோனா சிகிச்சைகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், "கரோனா தொற்று பரிசோதனை இல்லாமல் தமிழ்நாடு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா சோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்யலாம். அறிகுறி உள்ள முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் சோதனை கட்டாயம்.
அதிதீவிர அறிகுறி உள்ளவர்கள், அதிக பாதிப்பு உள்ளவர்கள், கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனையிலுள்ள அறிகுறி உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கட்டாயம் சோதனை செய்ய வேண்டும்.
வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். இவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டும் கரோனா சோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும்.
தொற்று இல்லையென்றால் வீட்டுத் தனிமையில் வைக்க வேண்டும். வணிக ரீதியாக வந்து 72 மணி நேரத்தில் திரும்புபவர்களுக்கு கரோனா சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அறிகுறி இருந்தால் கரோனா சோதனை செய்ய வேண்டும். தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறியுடன் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களை வீட்டு கண்காணிப்பில் இருக்க அனுமதிக்கலாம்.