தமிழ்நாடு

tamil nadu

Tomato price hike: சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு - காரணம் என்ன?

By

Published : Jun 26, 2023, 3:43 PM IST

சென்னை கோயம்பேடு சந்தையில், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Price of vegetables
சென்னை

சென்னை:சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தக்காளி விலை கிடுகிடுவென உயரத் தொடங்கி, இப்போது 50 ரூபாயை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் செளந்தரராஜன், "கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 70 லாரிகளில் சுமார் 15,000 டன் அளவிற்கு தக்காளியின் வரத்து இருந்த நிலையில், தற்போது 40 லாரிகளில் சுமார் 10,000 டன்னுக்கும் குறைவாக வரத்து வருகின்றது. இதனால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

தற்போது சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், மொத்த விற்பனையில் 15 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ரூபாய்க்கும் மேல் தக்காளியின் விலை உயர வாய்ப்பு இல்லை. மழை குறைந்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

கோயம்பேடு சந்தையில் தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குடை மிளகாய் கிலோ 140 ரூபாய்க்கும், அவரைக்காய் மற்றும் கொத்தவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பீன்ஸ் கிலோ 100 ரூபாய்க்கும், இஞ்சி கிலோ 190 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி கிலோ 40 ரூபாய்க்கும், மரவள்ளிக் கிழங்கு கிலோ 67 ரூபாய்க்கும், சேப்பங்கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும், அத்தியாவசிய உணவுப்பொருளான காய்கறிகளின் விலை உயர்வு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details