தமிழ்நாடு

tamil nadu

நடிகர் விஜய் ஆண்டனி இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 2:25 PM IST

Police investigation in vijay antony house: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின் தற்போது டிடிகே சாலையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நடிகர் விஜய் ஆண்டனி இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை
நடிகர் விஜய் ஆண்டனி இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: டிடிகே சாலையில் உள்ள வீட்டில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று (செப். 19) அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், வீட்டில் உள்ள பணியாளர் உதவியுடன் தனது மகளை மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். அங்கு மருத்துவர்கள் மீராவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த மீராவின் உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் மீரா அவரது தோழிகளை சந்திப்பதற்காக வெளியில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மன அழுத்தம்:பின்னர், இரவு வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு படுக்கை அரைக்கு சென்றவர் இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீரா கடந்த ஒரு வருட காலமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மன அழுத்தத்திற்கான ஆலோசனைகளையும், சிகிச்சையும் எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் விசாரணை: அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த மருத்துவரிடமும், நேற்று வெளியே சென்று சந்தித்த தோழிகளிடம் ஏதாவது கூறினாரா என்றும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்து இது தற்கொலை தானா என்ன உறுதி செய்வதற்கு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

பிரபலங்கள் இரங்கல்:மீரா விஜய் ஆண்டனி மறைவால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், நடிகர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகர், சந்தானம், குஷ்பு, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பிரமுகர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்றும், மேலும் பல பிரபலங்கள் X தளத்திலும் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வுக்கு பின் தற்போது டிடிகே சாலையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க:விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மாயம்; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details