தமிழ்நாடு

tamil nadu

திருட்டு செல்போன்களை விற்க வந்த திருடன்.. சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீஸ்!

By

Published : Jul 5, 2023, 9:47 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன்களை திருடிவிட்டு, சென்னையில் விற்பனை செய்ய வந்த பலே திருடனை, சென்னை காவல் துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். தற்போது சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Etv Bharat திருடனை விரட்டி பிடித்த உதவி ஆய்வளர்
Etv Bharat திருடனை விரட்டி பிடித்த உதவி ஆய்வளர்

திருடனை விரட்டி பிடித்த உதவி ஆய்வளர் பிரேம் குமார்

சென்னை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு ஒரு வீடு மற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதியில் இருந்து ஐபோன்கள் உள்பட 11 செல்போன்கள் திருடப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, திருடப்பட்ட அனைத்து செல்போன்களையும் காவல் துறையினர் ஆய்வு செய்த போது திருடுப்போன மருத்துவர் ஒருவரின் ஐபோன் மட்டும் கொள்ளையன் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் வைத்திருப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது. அந்த செல்போனில் லோக்கேஷனை ஆய்வு செய்தபோது திருடன் சென்னைக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விக்கிரவாண்டி காவல் துறையினர் உடனடியாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அங்குள்ள காவல் துறையினர் பர்மா பஜார், சைனா பஜார், ரிச்சி தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்களிடம் காணாமல் போன மொபைல்கள் விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று (ஜூலை 04) பிற்பகல் 1 மணியளவில் சைனா பஜாரில் செல்போன்களை விற்க ஒருவர் வந்திருப்பதாக வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பிரேம் குமார் மற்றும் தலைமை காவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது காவல் துறையினரின் வருவதை அறிந்து உஷாரான திருடன், உயர் நீதிமன்றம் பின்புறம் உள்ள சாலையில் வேகமாக நடந்து சென்றார். உதவி ஆய்வாளர் பிரேம்குமார் திருடனை பின் தொடர்ந்து சென்றபோது, திடீரென திருடன், திருடப்பட்ட செல்போன்கள் வைத்திருந்த பை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால், உதவி ஆய்வாளர் பிரேம் விடாமல் திருடனை துரத்தி பிடிக்க சென்றபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதும், திருடனை விடாமல் துரத்திச் சென்றார். ஒரு கட்டத்தில் திருடன் மழை நீர் வடிகால் அமைக்கும் குழியில் இறங்கி ஓடி தொடங்கினார். உதவி ஆய்வாளரும் வடிகாலில் இறங்கி சுமார் 1 கி.மீ., தூரம் வரை துரத்திச் சென்று குறளகம் அருகே வைத்து திருடனை சாதுர்யமாக மடக்கி பிடித்தார்.

தொடர்ந்து, திருடனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை திருவல்லிக்கேணி பழனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மேகநாதன் (37) என்பது தெரியவந்தது. இவர் வீடு புகுந்து செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரது பையில் இருந்த 11 செல்போன்கள் மற்றும் லேப்டாப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருடன் மேகநாதன் மீது சென்னையில் அபிராமபுரம், அண்ணா சாலை, எழும்பூர், ஐஸ் ஹவுஸ், நுங்கம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து திருடன் மேகநாதனை கைது செய்த சென்னை காவல் துறையினர், திருடனை விக்கிரவாண்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 1 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று திருடனை பிடித்த வடக்கு கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் குமார் மற்றும் தலைமை காவலர் வசந்த் ஆகியோரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க:காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்; பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details