தமிழ்நாடு

tamil nadu

TNUSRB SI தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய மனு; மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

By

Published : Jul 24, 2023, 1:44 PM IST

காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

TNUSRB SI தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு
TNUSRB SI தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு

சென்னை:காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மூன்றாம் பாலினத்தவரின் மனுவிற்குப் பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டதாகத் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்கான தொகையை தராத தனியார் நிறுவனம்; 73 வயது முதியவருக்கு ரூ.25,000 வழங்க உத்தரவு!

சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ?, பெண்ணாகவோ? தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்புச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டி உள்ளனர். அதே போல உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படாததால், தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கித் திருத்த அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும், சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: போலி டாக்டர் பட்டம் விவகாரம் : 3 மாதங்களில் விசாரணை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள் அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை என்று கூறினார். மேலும் மனுவிற்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தமிழக அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதியதாக 3 தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி - 450 மாணவர்கள் கூடுதலாக படிக்க வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details