தமிழ்நாடு

tamil nadu

ரவுடி சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு!

By

Published : Mar 10, 2023, 7:09 AM IST

கோவை வாலிபர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Rowdy fake encounter
தற்காப்பிற்காக போலீஸார் நடத்திய என்கவுண்டர்

சென்னை:மதுரையைச் சேர்ந்த சக்தி பாண்டி என்ற ரவுடி முன்பகை காரணமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தானாக வந்து சரணடைந்தார். பின்னர் விசாரணையில் அவர் தான் குற்றவாளி என்பது நிரூபனமானது. அதன் பிறகு அவரிடம் துப்பாக்கி எப்படி வந்தது? இன்னும் எத்தனை துப்பாக்கி வைத்துள்ளீர் என விசாரணை செய்தனர்.

அது சீனத் துப்பாக்கி என்பதும், சரவணம்பட்டி அருகே உள்ள பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகவும் சஞ்சய் ராஜா தெரிவித்துள்ளார். பின்னர் சஞ்சய் ராஜாவை, கோவை ரேஸ்கோர்ஸ் தனிப்படை போலீஸார் சிலர், சரவணம்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென காவலரை நோக்கிச் சுட்டுள்ளார்.

அப்போது தங்களது தற்காப்பு நடவடிக்கைக்காக ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், அவரது துப்பாக்கியால் சஞ்சய் ராஜாவின் காலில் சுட்டுள்ளார். அதில் காயமடைந்து மயங்கிய சஞ்சய் ராஜாவை போலீஸார் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்குச் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும் சஞ்சய் ராஜாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்த இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காதலித்து கர்ப்பமாக்கியதாக புகார்: இளைஞர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details