தமிழ்நாடு

tamil nadu

இயந்திர கோளாறால் ஏர் இந்தியா விமானம் திடீர் நிறுத்தம்: 9 மணி நேரத்திற்கும் மேலாக தவித்து வரும் 304 பயணிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 6:53 PM IST

அந்தமானில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. ஒரே நாளில் 2 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் தாமதமாகி, சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல வேண்டிய 156 பயணிகள் 6 மணி நேரத்திற்கு மேலாகவும், அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய 148 அந்தமான் விமான நிலையத்தில் 9 மணி நேரத்திற்கு மேலாகவும், தவித்துக் வருகின்றனர்.

ஏர் இந்தியா விமானம் திடீர் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு
ஏர் இந்தியா விமானம் திடீர் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

சென்னை: இன்று (அக்.20) அதிகாலை 5:05 மணியளவில் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை‌ 8:05 மணியளவில் அந்தமானில் இருந்து புறப்பட்டு, காலை 10:20 மணியளவில் சென்னைக்கு திரும்பி வரவிருந்தது. ஆனால் அந்தமானில் இருந்து சென்னை திரும்புவதற்காக தயாரகிக்கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதை அடுத்து அந்தமான் விமான நிலையத்திலேயே ஏர் இந்தியா பயணிகள் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்தமானிலிருந்து சென்னைக்கு வர இருந்த 148 பயணிகளும், அந்தமான் விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே இந்த ஏர் இந்தியா விமானம், காலை 10:20 மணியளவில் அந்தமானிலிருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, பின் மீண்டும் பகல் 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தது.

அந்த விமானத்தில் கொழும்பு செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், 156 பயணிகள், இன்று(அக்.20) காலை 9 மணியளவில் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, இலங்கை செல்வதற்காக காத்திருந்தனர். ஆனால் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னை வராததால், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பின்னர், மாலை 6 மணியளவில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து, இலங்கை செல்ல வேண்டிய 156 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்தனர். இதனால் இலங்கை செல்ல வேண்டிய பயணிகள், ஏர் இந்தியா அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பயணிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் அந்தமானில் இருந்து வரவேண்டிய விமானம் வரவில்லை என்றாலும், மாற்று விமானம் ஏற்பாடு செய்து, மாலை 6 மணியளவில், பயணிகள் அனைவரும் கண்டிப்பாக அனுப்பி வைக்கப்படுவர் என்று உறுதியளித்தப் பின்னரே, பயணிகள் சற்று அமைதியடைந்தனர்.

இதற்கிடையே அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய 148 பயணிகள் அந்தமான் விமான நிலையத்தில் 9 மணி நேரத்திற்கும் மேலாக, மாற்று விமானங்களின்று தவித்து வருகின்றனர். 2 ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டிய 304 பயணிகள், பல மணி நேரமாக விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். குறித்த நேரங்களில் பயணம் செய்யமுடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க:நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதி - 15 நாட்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details