சென்னை: சென்னையில், கணவரை விவாகரத்து செய்த பெண்ணின் (39) மறுமணத்திற்காக, அவர்களின் பெற்றோர் முஸ்லிம் மேட்ரிமோனியல் இணையத்தில் பெண் குறித்த விபரங்களை பதிவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முகமது ஷாபான் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார். அவர், கோவையில் தங்க நகைக்கடை ஒன்றின் அதிபர் எனவும், ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறி அந்த பெண்ணிடம் அறிமுகமாகி, அவரை மறுமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளனர். மேலும், முகமது ஷாபான், அந்த பெண்ணிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். இவருடைய பேச்சை நம்பிய அந்தப் பெண்ணும் மறுக்காமல் முகமது ஷாபான் கேட்ட பணத்தை அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், முகமது ஷாபான், பெண்ணின் குடும்பத்தில் செய்வினைகள் உள்ளதாகவும், அந்த செய்வினைகளை முஸ்லிம் ஹஜ்ரத்திடம் சொல்லி மசூதியில் வைத்து மந்திரம் ஓதி தீர்த்து விடலாம் எனவும், அதற்கு வீட்டில் உள்ள தங்க நகைகளை வைத்து மந்திரம் ஓத வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முகமது ஷாபானின் பேச்சை நம்பி, வீட்டிலிருந்த 415 சவரன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நகையை வாங்கிய முகமது ஷாபான் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். மேலும், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, தங்க நகைகளை மசூதியில் மந்திரம் ஓதி கொடுப்பதாக எடுத்துச் சென்றவர் வரவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், தனது பெற்றோரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் முகமது ஷாபான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் விக்டர் தலைமையில், போலீசார் தலைமறைவாகி பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த முகமது ஷாபான் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.