தமிழ்நாடு

tamil nadu

குப்பை தொட்டியில் கிடந்த 3 அடி நடராஜர் சிலை! கடத்தல் முயற்சியா? போலீசார் தீவிர விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:29 AM IST

Natarajar idol found in garbage: சென்னை வேப்பேரி பகுதியில் சாலையோர குப்பைத் தொட்டியில் கிடந்த 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை மீட்கப்பட்டு வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து 3 அடி நடராஜர் சிலை மீட்பு
சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து 3 அடி நடராஜர் சிலை மீட்பு

சென்னை: வேப்பேரியில் உள்ள சாலையோர குப்பை தொட்டியில் இருந்து 3 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை துப்புரவு பணியாளர்கள் கண்டெடுத்து வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேப்பேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூளை பகுதியில் தனியார் கலை கல்லூரி இயங்கி வருகிறது. அந்த கல்லூரி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று முன்தினம் (செப். 24) சென்னை மாநகராட்சி 58வது வார்டு தூய்மை பணியாளர் பரமேஸ்வரி, கௌரி ஆகியோர் காலையில் வழக்கம் போல் குப்பைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், குப்பைத் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சாக்கு மூட்டையில் ஒரு பொருள் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த இருவரும் அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் சுமார் மூன்று அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இது குறித்து அவர்களின் உயர் அதிகாரியான தேவதாஸ் என்பவருக்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தேவதாஸ் தூய்மை பணியாளரிடம் இருந்து நடராஜர் சிலையை பெற்றுக்கொண்டு அதனை வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையும் படிங்க:விரைவில் ரூ.60 கோடியில் 75 கலங்கரை விளக்கங்கள் மறுசீரமைப்பு!

மூன்று அடி கொண்ட நடராஜர் சிலையை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நடராஜர் சிலையானது குப்பை தொட்டிக்கு எப்படி வந்தது, யார் கொண்டு வந்து போட்டது, இது கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலையாக இருக்குமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். நடராஜர் சிலை எந்த காலத்தை சேர்ந்தது என கண்டறிவதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை ஆனது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என வேப்பேரி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க:Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!

ABOUT THE AUTHOR

...view details