தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat Tamil Exculusive : எஸ்பிபி குறித்து நீங்கா நினைவுகள்! - பகிர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 1:53 PM IST

Updated : Sep 25, 2023, 2:33 PM IST

Bhardwaj shares memories of SBP: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் நினைவு தினத்தை ஒட்டி இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்பிபி குறித்த தனது அனுபவங்களை ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டார்.

Bhardwaj shares memories of SBP
எஸ்பிபி குறித்த நினைவுகளைப் பகிர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்

எஸ்பிபி குறித்த நினைவுகளைப் பகிர்ந்த இசையமைப்பாளர் பரத்வாஜ்

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை ஒட்டி இசையமைப்பாளர் பரத்வாஜ் எஸ்பிபி குறித்த தனது அனுபவங்களை ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் பாடகர் என்பவர் மிகவும் முக்கியமானவர். சாதாரண பாடலை கூட மிகப் பெரிய பாடலாக மாற்றும் திறமை படைத்தவர் எஸ்பிபி. அந்த பாடலை அழகுபடுத்தி அதற்குத் தகுந்தார் போல் பாவனைகள் கொடுத்துப் பாடலை சிறப்பாக்கி விடுவார்.

பின்னணி பாடகர்களுக்கு ரோல் மாடல் அவர்தான். அவர் பாடிய நிறையப் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன்.‌ அனைத்துப் பாடல்களும் ஹிட். நான் சினிமாவிற்கு அறிமுகமாகாத காலத்தில் இருந்து அவரை எனக்குத் தெரியும். என்னுடைய பாடல் பயணத்தில் அவர் ஒரு முக்கியமான புள்ளி. இந்த தருணத்தில் அவரைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்.

1993ம் ஆண்டு நான் முதன்முதலாக ரெக்கார்ட் செய்த டூயட் பாட்டு 'பொன்னான காலம் வந்தாச்சு' என்ற பாடலை சித்ராவுடன் இணைந்து பாடினார். ஆனால் அப்படம் பாதியில் நின்று போனது. அதன் பிறகு நடிகர் அஜித்தின் 'காதல் மன்னன்' படத்தில் 'உன்னைப் பார்த்த பின்பு நான்' என்ற பாடலை பாடினார். இப்பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல பாடல்கள் எனது இசையில் பாடியுள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியே ஆகணும்.

'காதல் மன்னன்' வெற்றியால் மீண்டும் நானும் இயக்குநர் சரணும் அடுத்து இணைந்த 'அமர்க்களம்' படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். அதில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என்ற பாடல் மிகவும் கடினமான பாடல் அதனை அவர் சுலபமாகப் பாடினார். இந்த பாடலை மேடையில் பாடுவது கடினம். அதே போல் 'மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு', 'ஜெமினி' படத்தில் 'ஓ போடு' ஆகிய பாடல்கள் அற்புதமாகப் பாடினார்.

மேலும், ஒரு பாடலை பாடும் போது அது எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது, படத்தின் நடிகர் யார் என்பதை எல்லாம் யோசித்து தான் அவர் பாடுவார். அதுதான் அவரது சிறப்பான குணம். அதனால்தான் எந்த ஹீரோவுக்கு பாடினாலும் அது பொருந்திப் போகிறது.

அதுமட்டுமின்றி எல்லா உணர்ச்சிகளுக்கும் அவர் பாடியுள்ளார்.‌ அதேபோல் பாடும் போது பாடலின் இடையில் சிரிப்பது, பேசுவது, சிணுங்குவது போன்றவற்றைச் செய்வதில் அவர் கில்லாடி. இப்போது உள்ள பாதி பாடகர்களுக்கு மொழியே தெரிவதில்லை. ஹிந்தியில் உள்ளவர்களை அழைத்து வந்து பாட வைக்கின்றனர். இப்போது நிறையக் குத்துப் பாடல்கள் வருகின்றன ஆனால் அதில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் தற்போது வருவதில்லை. ஆனால் மக்கள் அதனை ரசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:"இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" - பாடும் நிலா எஸ்பிபி நினைவு தினம்!

Last Updated :Sep 25, 2023, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details