தமிழ்நாடு

tamil nadu

"தற்காலிக செவிலியர்களை திமுக அரசு பழிவாங்குகிறது" - சென்னையில் கைக்குழந்தைகளுடன் போராடும் செவிலியர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:17 PM IST

Updated : Sep 25, 2023, 6:46 PM IST

MRB Covid nurses protest: கரோனா பெருந்தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களை நிரந்திரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செவிலியர்கள் கைக்குழந்தைகளுடன் 3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்
செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர்கள்

சென்னை: கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் எம்ஆர்பி தேர்வினை எழுதி தகுதிப்பெற்று பணிக்கு வந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி, மருத்துவச் சேவைத்துறையில் நிரந்தரத் தன்மையுள்ள செவிலியர் பணியிடத்தினை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தற்காலிக செவிலியர்கள் அனைவரும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், கைக்குழந்தைகளுடன் தொடர்ந்து 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள், கரோனா காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், நிரந்திர செவிலியர்களுக்கு இணையாகவே பணிபுரிந்து வந்தோம் என்றும், அதிமுக ஆட்சியின் போது நியமனம் செய்யப்பட்டு, குடும்பத்தை விட்டு தனியாக தங்கி பணிபுரிந்து வந்த தங்களை, தற்போது திமுக அரசு பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மாவட்ட சுகாதாரக் குழுக்களின் மூலம் பணி நியமனம் செய்யப்படும் போது 11 மாதம் பணிபுரிந்து விட்டு, ஒரு மாதம் விடுமுறை அளிப்பதால் பணி நிரந்தரம் என்பது கிடைக்காது எனவும், தங்களுக்கு அதே தொகுப்பூதியத்தில் நிரந்தரத் தன்மையுடைய பணியில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து எம்.ஆர்.பி கரோனா நர்ஸ் அசோசியேசன் (MRB corona nurse association) துணைத் தலைவர் உதயகுமார் கூறும்போது, "கரோனா பேரிடர் தொற்றுக் காலத்தில் கடந்த 2020 ஆண்டு, சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமான முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் செவிலியர்களுக்கு தற்காலிக செவிலியர் பணியில் இருந்து நிரந்தர தன்மையுடைய செவிலியர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டது.

மீதமுள்ள மூன்றாயிரத்து 290 தற்காலிக செவிலியர்களுக்கு, சுமார் 3 ஆயிரத்து 300 காலிப்பணியிடம் இருப்பதால் நிரந்தர தன்மையுடைய செவிலியராக மாற்றம் செய்யவேண்டும் என்று அரசிடம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, அரசு தரப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதற்கான அரசு கோப்புகளில் மனிதவள மேம்பாட்டுத்துறையும் ஒப்புதல் அளித்தது.

ஆனால் அரசு அளித்த வாக்குறுதியை மீறி 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவில் எவ்வித முன்னறிவிப்பின்றி, தி.மு.க. தேர்தல் வாக்குறுதி 356க்கு எதிராகவும், 3 ஆண்டு பணி செய்த எங்களை பணிநீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு. மேலும் இதனை ரத்து செய்யக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

அதே நேரத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அத்தகைய பணி ஏதும் வழங்கப்படவில்லை. எம்ஆர்பி தேர்வினை எழுதி சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட தங்களுக்கும் பணி ஏதும் வழங்கவில்லை. கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட எம்ஆர்பி கோவிட் செவிலியர்களுக்கு, உரிய தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்றுக்கூறி வழக்கு தொடுத்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் பணி நியமனம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடபட்டது. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி பணி வழங்க வேண்டும் . திமுக தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

இந்த விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு எங்களுக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் அதிகாரிகள் அரசிற்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர். எங்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்வதால் அரசிற்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படாது. போராட்டத்தின் போது ஏற்படும் அம்சம்பாவிதங்களுக்கு அரசுத் தான் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து, கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் புவனேஸ்வரி, கௌரி ஆகியோர் கூறும்போது, "எம்ஆர்பி தேர்வில் தகுதிப் பெற்றிருந்த தங்களை 3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும் எனக் கூறினர். அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை இணை இயக்குனர் குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்தனர். அதன் பின்னர் பணியில் சேர்ந்து, பிற செவிலியர்களுக்கு இணையாகவே நாங்களும் பணி புரிந்தோம். ஆனால் திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பணியில் இருந்து எங்களை நீக்கி விட்டனர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விகுள்ளாகிறது. எங்களின் வாழ்வாதரத்தை முன்னிறுத்தி, நிரந்தரத்தன்மையுடைய செவிலியர் பணியினை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"ஹைதராபாத்தில் போட்டியிடுங்கள்" - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த அசாதுதீன் ஓவைசி!

Last Updated :Sep 25, 2023, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details