தமிழ்நாடு

tamil nadu

4 மாவட்டங்களில் கன மழை: நிவாரணப் பணிக்கு கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:26 PM IST

MK Stalin appointed Four ministers: நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தக் கூடுதலாக நான்கு அமைச்சர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசின் “வாட்ஸ் அப்” எண் மற்றும் “டிவிட்டர்”ல் பதிவுகளைத் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரக்கால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ்.ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்தி பணிகளை விரைவுபடுத்தக் கூடுதலாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகிய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” மூலமாகப் பதிவுகளைத் தெரிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கனமழையால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைத்தளத்தின் (Social Media) மூலம் தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்: 8148539914 மற்றும் “டிவிட்டர்” (http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief)) என்ற தளத்தின் மூலமாகப் பதிவுகளைத் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:கன்னியாகுமரியில் கடந்த 25 மணி நேரமாக விடாது பெய்யும் கனமழை… முக்கிய அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details