தமிழ்நாடு

tamil nadu

அனல் பறக்கும் அரசியல் வசனங்கள்.. கேப்டன் மில்லர் படத்தைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:34 PM IST

Captain Miller Movie: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தினைப் பாராட்டி தனது 'X' வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கேப்டன் மில்லர்
Captain Miller

சென்னை:அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துப் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனுஷின் நடிப்பு, ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆங்கிலேய ஆட்சியில் மக்கள் படும் இன்னல்கள், அதிகார வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தும் முறை, சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு ஆக்ஷன் அதிரடி படமாக இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க சாதியினரைக் கேள்வி கேட்கும் வகையில், இத்திரைப்படம் அமைந்துள்ளதாகப் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, தனது X பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பைச் சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் , இசை அமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாகப் பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

குறிப்பாக "முன்னாடி அவனுக்கு அடிமையாக இருந்தோம். இப்போது வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருக்கிறோம்". "கீழ் சாதி, மேல்சாதி, குடிசை, மாளிகையென்று எங்க இருந்தாலும் பெண்கள் அடிமைதான்". "கோயில் கருவறைக்குள்ள போக விடுவானுங்களா?" "கோயிலுக்குள்ள வரக் கூடாதென்று எந்த சாமியும் சொல்லல" என்று தனுஷ் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இத்திரைப்படத்தில் வரும் வசனங்களை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உடன் இணைந்து மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அசுரன் படத்தில் படிப்பு பற்றியும் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய வசனங்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் சமூக நீதி வசனம் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்? என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்..!

ABOUT THE AUTHOR

...view details