சென்னை:அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துப் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனுஷின் நடிப்பு, ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆங்கிலேய ஆட்சியில் மக்கள் படும் இன்னல்கள், அதிகார வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தும் முறை, சுதந்திரப் போராட்டம் ஆகியவற்றைக் கதைக் களமாகக் கொண்டு ஆக்ஷன் அதிரடி படமாக இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அனுமதிக்காத ஆதிக்க சாதியினரைக் கேள்வி கேட்கும் வகையில், இத்திரைப்படம் அமைந்துள்ளதாகப் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து, தனது X பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பைச் சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் , இசை அமைப்பாளர் சகோதரர் ஜிவி பிரகாஷ் குமார், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.