சென்னை:பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாப்பாத்தி. இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த பாப்பாத்தி, தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், தான் முதுநிலைப்பட்ட மேற்படிப்பு படித்துள்ளதாகவும் தெரிவித்து, தனது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு வழங்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக பாப்பாத்திக்கு பணி வழங்க ஆணையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று (மே 10) சென்னை தலைமைச் செயலகத்தில் கோரிக்கை வைத்த பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.