தமிழ்நாடு

tamil nadu

மயிலாப்பூரில் கலாசார மையம் - அமைச்சர் சேகர் பாபு கூறுவது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 7:46 AM IST

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில் இராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலாசார மையம் கட்டப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

minister sekar babu
அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது, "தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-2023ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கலாசார மையம் முதற்கட்டமாக மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்படும்.

அந்த மையத்தில் ஆன்மிக நூலகமும் அமைக்கப்படும். மேலும் மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகள், மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இராஜா அண்ணாமலைபுரம் தெற்கு கேசவபெருமாள்புரத்தில் உள்ள சுமார் 22.80 கிரவுண்ட் இடத்தில் ரூ.28.76 கோடி மதிப்பீட்டில் கலாசார மையம் அமைக்க நிர்வாக அனுமதி மற்றும் மதிப்பீடு அங்கீகாரம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

கலாசார மையத்தின் வசதிகள்:புதிதாக அமைக்கப்படும் கலாசார மையமானது தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் 4,757 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. தரைத்தளத்தில் தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையிலான கண்காட்சி அரங்கம் மற்றும் உணவு உண்ணும் அறைகள், முதல் தளத்தில் மூன்று கலாசார பயிற்சிக் கூடங்கள் மற்றும் 120 நபர்கள் அமரும் படியான ஒரு செயல்திறன் கூடம், இரண்டாவது தளத்தில் மூன்று பல்நோக்கு கூடங்கள் மற்றும் 233 நபர்கள் அமரும்படியான வடிவமைப்புடன் கூடிய உணவு உண்ணும் அறை, மூன்றாவது தளத்தில் 231 நபர்கள் அமரும்படியான ஒரு பல்நோக்கு கூடம் மற்றும் 90 நபர்கள் அமர்ந்து உணவு உண்ணும் அறை ஆகியவை அமைக்கப்படவுள்ளன என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

இது குறித்து இந்து சமயம் அறிநிலையத் துறை கூறியதாவது, "கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு குறித்த காலத்திற்குள் நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மையத்தில் நியாயமான வாடகையில் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், இங்கு ஆன்மிக நூலகம் ஒன்று அமைக்கப்படுவதோடு, மீட்கப்பட்ட தெய்வத் திருமேனிகளை பாதுகாப்பாக வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:"தென்மாநிலங்கள் பாஜகவுக்கு தேவையில்லை என நினைக்கின்றனர்" - கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details