தமிழ்நாடு

tamil nadu

PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்

By

Published : Apr 26, 2023, 5:53 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஆடியோவிற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கும் வகையில் ஒரு வீடியோவையும், அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்
PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வீடியோ

சென்னை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிட்ட முதல் ஆடியோவில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மருமகன் சபரீசன் இருவரும் கடந்த இரண்டு வருடத்தில் கையில் வைத்திருக்கும் பணம் மட்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்” என இருந்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஜனநாயகத்தில் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள், உண்மைத் தன்மையை ஆராயாமல் வெளியிட்டது வருத்தம் அளிக்கிறது” எனக் கூறி இருந்தார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 25), மீண்டும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டாவது ஆடியோவை வெளியிட்டார்.

அதில், “ஒரு பதவி, ஒரே தலைவர் என்ற பாஜகவின் கொள்கை எனக்கு (பிடிஆர்) பிடிக்கும். இங்கு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை முதலமைச்சரின் மகனும், மருமகனும் மட்டும் ஆளுகின்றனர். இது எனக்கு பதவியேற்ற 8 மாதங்களில் தெரியவந்தது” என அமைச்சர் பேசியதாக இருந்தது. இந்த நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்து இன்று (ஏப்ரல் 26) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசும் அமைச்சர் பிடிஆர், “திராவிட மாடலை ஜீரணிக்க முடியாததால், மலிவான தந்திரங்களைக் கொண்டு போலியான ஒலிப்பதிவு வெளியீடு. அடுத்த தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆற்றல்மிகு செயல் வீரரான உதயநிதி குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன். என்னை பிரிப்பதன் மூலம் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கும் பிளாக்மெயில் கும்பலின் முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.

திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பமாக இயங்கி வருகிறோம். சபரீசன் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்து வருகிறார். ஆடியோவில் சொல்லப்பட்டது போல், யாரிடமும், எந்த காலத்திலும் நான் தொலைபேசியில் பேசவில்லை. நான் பேசியதாக பொய்யான ஆடியோ வெளியிட்டது கோழைத்தனமானது" என சில உதாரணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep fake போலி காணொலிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன்.

இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால், ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன்.

இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன் வராதது குறிப்பிடத்தக்கது. பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கி உள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில், பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும் மற்றும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம். இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம்.

இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் மத்திய பாஜக அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும்.

இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும். எனவே, இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன், நவீன இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

முதலமைச்சர், தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி, அமைச்சர் உதயநிதி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழ்நாடு விளையாட்டுத் துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்? அதேபோன்று, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு, மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டும்?

நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால், இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:PTR TAPE 2: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details