தமிழ்நாடு

tamil nadu

காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்ப சட்ட ஆலோசனை பெற்ற பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 3:57 PM IST

அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவது குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்காததால், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசே மருத்துவ இடங்களை நிரப்புவது குறித்து அனுமதிக்கும் படி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உரிய சட்ட ஆலோசனைக்குப் பின் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ படிப்பு இடங்களை நிரப்புவது தொடர்பாக முதலமைச்சரின் ஒப்புதலோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மந்தைவெளி பகுதியில் 'மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு' நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இன்று (அக்.22) தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) சார்பில் கடந்த 37 ஆண்டுகளாக 'அக்டோபர் மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு (Breast Cancer Awareness) மிக அவசியமான ஒன்றாக உள்ளது. 1 லட்சம் மகளிருக்கு 25.8 பேர் மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுகிறது. 1 லட்சம் பேரில் 12.7 பேர் இதனால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மார்பக புற்றுநோய் கண்டறியும் 2D மேமோகிராம் கருவி தமிழகத்தில் 43 இடங்களில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல நவீன 3டி மேமோகிராம் கருவிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கிறது.

முற்றிலும் இலவச பரிசோதனை:இதற்காக, ரூ.2500 தொகையில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழுவதும் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ஆண்களுக்கான புகையிலை மூலம் வாய்ப்புற்றுநோய் என எதுவாக இருந்தாலும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் உயிர்காக்க முடியும்.

அகில இந்திய ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு:எம்பிபிஎஸ் படிப்பில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாகவும், 85 சதவீதம் மாநில ஒதுக்கீட்டு இடங்களாகவும் உள்ளது. இதில் கடந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இடங்கள் காலியாக இருந்தன. இந்தாண்டு 83 இடங்கள் காலியாக உள்ளது. இதனால், கடந்த வாரம் தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், முதலமைச்சர் அறிவுறுத்தல் படி ஏற்கனவே, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களை தமிழ்நாடு அரசே நிரப்பிக்கொள்ள அனுமதிக்கும் படி நாளையோ அல்லது நாளை மறுதினமோ, சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை செய்த பிறகு சட்டரீதியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

5 பேர் டெங்குவால் பலி: தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழை, வெப்பச்சலனம் என தொடர்ந்து மழை பதிவு இருந்து வந்தது. இதனால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள்தான் உள்ளது. 5200 பேர் இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்: கடந்த 2012 மற்றும் 2017ம் ஆண்டு தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, கட்டுக்குள் உள்ளது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியிலும் கொசு மருந்து தெளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களும் தங்கள் வசிக்கும் இடங்களை சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி - பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!

ABOUT THE AUTHOR

...view details