தமிழ்நாடு

tamil nadu

இஸ்ரேலில் இருந்து 110 தமிழர்கள் மீட்பு..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 9:02 AM IST

110 Tamil Peoples came from Israel : இஸ்ரேலில் இருந்து 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் போர்: இஸ்ரேலில் இருந்து 110 தமிழர்கள் மீட்பு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இஸ்ரேல்-பாலஸ்தீன் போர்

சென்னை:இஸ்ரேலில் இருந்து தாயகம் வருவதற்கு முன்பதிவு செய்து இருந்த 128 தமிழர்களில் இதுவரை 110 பேர் பாதுகாப்பாக தமிழ்நாடு வந்து விட்டதாகவும் இன்னும் 18 பேர் மட்டுமே வரவேண்டி உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையே போர் நடைபெற்று வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேல் பகுதிகளில் தங்கி உள்ள இந்தியர்களை, மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம், மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்துள்ளது.

மேலும், அங்குள்ள தமிழர்கள், தமிழ்நாடு அரசுடன் தொடர்பு கொள்வதற்கு தனி உதவி எண்கள், இணையதள முகவரி வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை 128 தமிழர்கள் பதிவு செய்து இருந்தனர். இதனையடுத்து, ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் 98 தமிழர்கள், அரசு செலவில் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர்த்து, சொந்தப் பணிகளுக்காக சென்றிருந்த 12 பேர், அவர்களுடைய சொந்த செலவில் திரும்பி வந்துள்ளனர். எனவே, இதுவரை 110 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பி உள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்கள் பாதுகாப்பான முறையில் அவர்களின் சொந்த ஊருக்கு பயணிகள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த 32 தமிழர்களை, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு அங்குள்ள தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டன.

தகவலின் அட்டிப்படையில், இதுவரை 128 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்ப பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பதிவு செய்தவர்களில் 110 பேர் வந்துள்ளனர். இன்னும் 18 பேர் மட்டுமே வர வேண்டும். மேலும், பதிவு செய்யும் அனைவரும் பாதுகாப்பான முறையில் அழைத்துவரப்படுவார்கள். இவர்களில் 95% உயர்கல்வி ஆராய்ச்சி மாணவர்கள். இவர்களுக்கும் அரசு மூலம் உதவி தேவைப்பட்டால் முதலமைச்சர் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அயலக தமிழர் நலத்துறை சிறப்பாக செயல்படுகிறது. அந்தத் துறை உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதத்தில், தனி ஆஃப் உருவாக்கப்பட இருக்கிறது. அதன் மூலம், எந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவர்களை உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக இருக்கும்" என்று கூறினார்.

தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் பேசியதாவது, "திடீரென போர் ஏற்பட்டதால் நாங்கள் அனைவரும் மிகுந்த பயத்தில் இருந்தோம். அந்த நாட்டில் இருந்தவர்களுக்கும் இது புதுமையாக இருந்தது. எங்கள் பெற்றோர் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அங்கு எல்லையில் தான் மிகவும் போர் அதிகமாக நடைபெற்றது. நாங்கள் இருந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

மக்கள் இருக்கும் பகுதியில் சைரன் ஒலி கேட்டதும் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பாக நாடு திரும்பினர். மத்திய அரசு விரைவாக செயல்பட்டு அனைவரும் மீட்டு அழைத்து வந்துள்ளது. அதேபோல் டெல்லி வந்த பிறகு தமிழக அரசின் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றோம். மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.

மேலும், டெல்லியில் இருந்து சென்னை வந்த 32 பேரும் சென்னை, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர், நாகைப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கினாரா மஹுவா மொய்த்ரா? பாஜக எம்.பி. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details