தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து; வழக்கு முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 3:57 PM IST

Goondas act : திருவண்ணாமலை சிப்காட் விரிவாக்க பணிகளுக்கு எதிராக போராடிய விவசாயி மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டதால், குண்டர் சட்ட வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை விவசாயி மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை:திருவண்ணாமலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடிய விவசாயி அருள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தீவிர குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரம் இல்லாததால், அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற்று, வழக்கை முடித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, அனக்காவூர் ஒன்றியத்தில் மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக, மேல்மா, குரும்பூர், காட்டுகுடிசை, நர்மாபள்ளம், நெடுங்கல், தேத்துறை, வட ஆளாய் பிறந்தான், இளநீர் குன்றம், அத்தி, மணிபுரம் மற்றும் வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் 3 ஆயிரத்து 174 ஏக்கர் வேளாண் நிலத்தைக் கையகப்படுத்தப் போவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், 126வது நாளாகக் கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று நடத்திய பேரணியில், பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக, 11 வழக்குகளின் அடிப்படையில், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கிய ராஜ் ஆகிய 7 பேர் மீது, ஆட்சியரின் உத்தரவு பேரில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி குண்டர் சட்டம் போடப்பட்டது. இதனையடுத்து, 6 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையைத் திரும்பப்பெற்ற தமிழக அரசு, அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவில்லை.

இதனால், தனது கணவர் அருள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவரது மனைவி பூவிழி கீர்த்தனா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர், “ எந்த ஒரு குற்ற வழக்குகளிலும் அருள் ஆறுமுகம் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முகாந்திரம் இல்லாத நிலையில், மக்களைத் தூண்டினார் என்றும், நிலம் வழங்க முன்வருபவர்களைத் தடுத்தார் என்றும் குற்றம்சாட்டப்படுவதை ஏற்க முடியாது. 100 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடந்துள்ள நிலையில், உள்நோக்கத்தோடு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கருத்து தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, தமிழக அரசு, விவசாயி அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறுவதாகக் கடந்த 4ஆம் தேதி அறிவித்தது. இந்த வழக்கு இன்று (ஜன.8) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில், அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:நாகையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details