தமிழ்நாடு

tamil nadu

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 1:16 PM IST

former Minister OS Manian Election victory chennai High Court order: 2021 சட்டப்பேரவை தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை:கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால், அவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து, அவரது வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், வேதாரண்யம் தொகுதி முழுவதிலும் ரூ. 60 கோடி அளவிற்கு பணப்பட்டுவாடா செய்துள்ளதாகவும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டியும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை விநியோகித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, இன்று (டிச.22) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, “2021 சட்டப்பேரவை தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை'' என கூறி திமுக வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடிக்கு மேலும் 2 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் - சென்னை மாநகராட்சி அனுப்பிவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details