தமிழ்நாடு

tamil nadu

14 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பட்டாசு கடை விபத்து; ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 9:14 PM IST

Madras Hifh court news: 14 ஆண்டுகளுக்கு முன் நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்த 32 குடும்பங்களுக்கான இழப்பீட்டை நிர்ணயிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆனந்தகுமார் என்பவர் கடையில் பட்டாசு வெடித்து, பெரிய தீ விபத்து ஏற்பட்டு, அதில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.

இதில் விபத்தில் உயிரிழந்த 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாநில அரசு 27 பேருக்கு தனியாக தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கியது. இந்த இழப்பீடு போதுமானதல்ல என்றும், தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட 32 பேரின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்தப்பட்டுள்ளது. அதனால் பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்தகுமாரும், அரசும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி, உயிரிழந்தவர்களின் வயது, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில், 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை இழப்பீடு நிர்ணயித்து, 32 பேரது குடும்பத்துக்கு மொத்தம் 2 கோடியே 76 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும், அதில் தமிழக அரசும், மற்றும் கடை உரிமையாளர் ஆனந்தகுமாரும் தலா 50 சதவீதத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:“செப்.12-க்குப் பிறகு தமிழகத்திற்கு நீர் திறந்து விட சாத்தியமில்லை” - கர்நாடக அரசு

இந்த உத்தரவை எதிர்த்து பட்டாசுக்கடை உரிமையாளர் ஆனந்தகுமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஆனந்தகுமார் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இதுவரை உரிய இழப்பீடை தீர்மானிக்கவில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்க, ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். இழப்பீட்டைத் தீர்மானிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்த உயர் நீதிமன்றம், ஆணையத்தை அமைத்தது தொடர்பாக 4 வாரத்தில் அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த ஆணையத்தில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவற்றை ஆராய்ந்து உரிய விசாரணை நடத்தி, இழப்பீடு தொடர்பாக 6 மாதத்தில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆணைய அறிக்கையின் அடிப்படையில், இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இடைக்கால நிவாரணமாக 32 குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 குடும்பங்களுக்கு மீதமுள்ள 4 லட்சம் ரூபாயும், 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள ஆந்திராவைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கு மீதமுள்ள 3 லட்சம் ரூபாயையும் 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:“பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக அமையும்" - பிரதமர் மோடி பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details