தமிழ்நாடு

tamil nadu

கருத்தரங்குகளில் மது விநியோகிப்பது சட்டத்திற்கு எதிரானது - சென்னை உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:08 AM IST

Madras High Court: விளையாட்டு மைதானங்கள், சர்வதேச கருத்தரங்குகளில் மது விநியோகம் செய்வது மது விலக்குச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறிய உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, வழக்கறிஞர் சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “விளையாட்டு மைதானங்களில், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது" என விளக்கமளித்தார்.

பின்னர், மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, “மது விலக்குச் சட்டத்தின்படி, பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும், விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு அரங்குகள் பொது இடங்கள் என்பதால், அங்கு மதுபானம் விநியோகிக்கக் கூடாது" என்றார்.

அப்போது நீதிபதிகள், “கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாநாடுகளிலும் மதுபானம் விநியோகிக்க அனுமதி கோருவர். இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி டிக்கெட் வழங்கினால், மதுபானம் இலவசம் என தெரிவித்தால் அது விற்பனையாகாதா?" எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் மட்டுமே அரசாங்கம் செயல்படுவதாகக் கூறுவது தவறு என்று கூறினார்.

இதையடுத்து, விளையாட்டு மைதானங்கள், சர்வதேச கருத்தரங்குகள் பொது இடம் எனும்போது, மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, இது சம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:தமிழக மணல் குவாரிகளில் சோதனை எதிரொலி.. அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தமிழக அரசு, ஐஏஎஸ் அதிகாரிகள் மனுத் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details