தமிழ்நாடு

tamil nadu

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதி - 15 நாட்களில் சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 12:49 PM IST

Updated : Oct 20, 2023, 1:00 PM IST

ESI Case: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரதா தொழிலாளர் வைப்பு நிதியை ஊழியர்களின் கணக்கில் செலுத்தாததால் எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras high court
நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதி

சென்னை: நடிகை ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். இவர் சென்னை அண்ணாசாலையில் ராம்குமார், ராஜ்பாபு ஆகிய இருவருடன் இணைந்து திரையரங்கம் நடத்தி வந்தார்.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நவம்பர் 1991 முதல் 2002 வரை 8 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், 2002 முதல் 2005 வரை 1 லட்சத்து 58 ஆயிரமும், 2003-இல் வசூலித்த இ.எஸ்.ஐ பணத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தொழிலாளர்கள் காப்பீட்டு பணத்தை திரும்பச் செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா சார்பில் கூறப்பட்டது.

இ.எஸ்.ஐ பணத்தை சரியாக செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 6 மாத சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இ.எஸ்.ஐ தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, தொழிலாளர்கள் பணத்தைச் செலுத்தாததால் வழக்கு தொடரப்பட்டதாகவும், பணம் செலுத்தவில்லை என பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்தார்.

ஜெயப்பிரதா தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, “ஏன் தொழிலாளர்கள் பணத்தை செலுத்தவில்லை என இ.எஸ்.ஐ தன்னிலை விளக்கம் பெறவில்லை. நோட்டீசும் அனுப்பாமல் இ.எஸ்.ஐ சார்பில் நேரடியாக வழக்கு தொடரப்பட்டது. மேலும், மருத்துவ சிகிச்சையில் இருந்ததால் பணத்தை செலுத்த முடியவில்லை.

பொது மன்னிப்பு விண்ணப்பத்தை இ.எஸ்.ஐ விசாரணை செய்யவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், பணத்தை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வட்டியுடன் பணத்தை மீண்டும் செலுத்துவதாக இருந்தால் 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்ய நீதிமன்றம் தயாராக இருப்பதாக தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை கடந்த 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இ.எஸ்.ஐ தொழிலாளர்கள் பணத்தை திரும்பச் செலுத்துவது குறித்து ஜெயப்பிரதா எதுவும் தெரிவிக்காததால், எழும்பூர் நடுவர் நீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், ஜெயப்பிரதா 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து 20 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை - முதுகெலும்பில் மேற்கொண்ட சிகிச்சை என்ன?

Last Updated : Oct 20, 2023, 1:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details