சென்னை: கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், அதை தடுக்க முயன்ற தன்னை ஆபாசமாக பேசியதுடன், காரை ஏற்றி கொலை முயற்சி செய்ததாகவும் அதிமுகவைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், நாசர் மீது மிரட்டல், அவதூறாக பேசுதல், தாக்க முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆவடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நாசர் தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.