தமிழ்நாடு

tamil nadu

சனாதன தர்மம் விவகாரம்: அமைச்சர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 9:08 PM IST

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு, இந்துக்களுக்கு எதிராக பேசிவரும் திமுக எம்பி ஆ ராசா ஆகியோரது பதிவியை பறிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளிவைப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னை:இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், கிஷோர்குமார், V.P.ஜெயக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (அக்.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், அமைச்சர்களின் பேச்சு விவரங்களை பென்டிரைவில் தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை சிடி-யாக தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் தனது வாதத்தில், “அமைச்சர் உதயநிதியின் பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. கருத்து சுதந்திரம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பேசுவதை அனுமதிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான்” என்றார். மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், “ஒரு குறிப்பிட்ட மதத்தை விமர்சித்ததன் மூலம் அமைச்சர், மதச்சார்பற்ற தன்மையை இழந்து விட்டார். அனைத்து சமூக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி பதவியேற்ற அமைச்சர், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கரோனா போல் ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். இதன்மூலம் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்” என வாதிட்டார்.

பின்னர் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் கூறுகையில், “தற்போது அமைச்சர்களாக இருக்கும் இவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காது என்பதால் இந்த நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் மட்டுமே அறநிலையத் துறையில் பணியாற்றமுடியும் என அறநிலையத் துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தின் அடிப்படையில் உள்ள 40 ஆயிரம் கோயில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அமைச்சராக உள்ளவர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் தனது துறைக்கு அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்” என வாதிட்டார்.

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எந்த தகுதி இழப்பும் வராத நிலையில், அமைச்சர்களின் பதவியை பறிக்க கோரும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்களுக்கு எதிராக கோ வாரண்டோ (Quo warranto) வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்டார். தகுதியில்லாத ஒருவர், சட்டவிரோதமாக அமைச்சராக பதவி வகித்தால் கோ வாரண்டோ வழக்கு மூலம் அவரை நீக்கலாம். ஆனால், தகுதிப்படி சட்டப்படி அமைச்சர் பதவி வகிப்பவரை கோ வாரண்டோ மூலம் நீக்க முடியாது என்றார்.

அப்போது, அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், ஜோதி ஆகியோர், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், பதில்மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோரும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தனர். தொடர்ந்து, அமைச்சர்கள் தரப்பில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:"காவிரியில் 16,000 கன அடி தண்ணீர் திறக்க கோரிக்கை வைப்போம்" - அமைச்சர் துரைமுருகன் தகவல்

ABOUT THE AUTHOR

...view details