தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் நாளை 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 6:34 PM IST

Ma.Subramanian: தமிழகம் முழுவதும் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி, அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ளவே சுகாதார துறையை குறை கூறுகிறார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்!
எடப்பாடி பழனிச்சாமி, அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்ளவே சுகாதார துறையை குறை கூறுகிறார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்!

சென்னை:டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவதாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் பட்டியல் தயார் செய்து அந்தந்த மாவட்டங்களில் நோய் தடுப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் தொடர்பாக காய்ச்சல் கண்காணிப்பு உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக 23 ஆயிரத்து 717 தினசரி தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயிர் காக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளது. மருந்துகள் இருப்பை கண்காணிக்கவும் குழுக்கள் அமைக்கபட்டுள்ளது.

பள்ளிகள், உணவகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், திருமண மண்டபங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணியும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நோய் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. 2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கிராமம், நகரம் வாரியாக பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 740 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: “அப்பா படத்திற்காக நான் லஞ்சம் கொடுத்தேன்" - சமுத்திரக்கனி பரபரப்பு பேட்டி!

சென்னையில் மட்டும் 4,030 டெங்கு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை முடியும் வரை இது போன்ற முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என எல்லா இடங்களிலும் பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருக்கும். மருந்துகளும் கையிருப்பு இருக்கும்.

2017ஆம் ஆண்டு அதிகபட்சமாக 23,906 டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும், 65 பேர் டெங்கு காய்ச்சலில் இறந்துள்ளனர். எதிர்கட்சியின் தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே டெங்கு காய்ச்சல் பிரச்னையை அறிக்கையாக அளித்துள்ளார். டெங்கு வாழ்க, எடப்பாடி பழனிச்சாமி வாழ்க” என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மிகப்பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 1,000 காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், டெங்கு காய்ச்சல் குறித்து விபரங்களை 104 இலவச தொலைபேசி எண் மூலம் பெற வழி வகை செய்யபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு:தமிழகத்தில் ஜனவரி முதல் இதுவரை 4,524 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர். காய்ச்சல் வந்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்யுமாறு கூறிய அவர், தேவையற்ற பதற்றம் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் ஈபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர்’ - கே.பி.முனுசாமி!

ABOUT THE AUTHOR

...view details