தமிழ்நாடு

tamil nadu

“தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” - கே.எஸ்.அழகிரி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 6:59 AM IST

K.S.Alagiri: தமிழக மீனவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்துகிற வகையில் மத்திய பாஜக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுக்க பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை
கே.எஸ்.அழகிரி

சென்னை:இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மீனவர்கள் விசைப்படகுகளில் பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற போது நேற்று 27 மீனவர்களும், அவர்களது 5 இயந்திரப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச கடல் எல்லையை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள். இந்த மீனவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்செய்தி கடலோர மாவட்ட மீனவர்களிடையே கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லைப் பகுதியை மீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்படுவதும், மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. கடற்பகுதியில் மீன்பிடிக்கச் செல்கிற தமிழக மீனவர்கள், இரவு நேரங்களில் சர்வதேச கடல் எல்லை எங்கே இருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியாத காரணத்தால், தவறுதலாக எல்லையைத் தாண்டி செல்கிற நிலை ஏற்படுகிறது.

இரு நாடுகளின் கடல் பகுதியில் எல்லைகளை வகுக்கலாமே தவிர, மீன்பிடிக்கச் செல்கிற மீனவர்களை எல்லையை தாண்டுவதாக காரணம் கூறி, இலங்கை ராணுவம் கைது செய்வது மனிதாபிமானமற்றது. மிகமிக கொடூரமானது. அதேபோல, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், பைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முதல் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.

அவர்கள் திட்டமிட்டபடி, சனிக்கிழமை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாத நிலையால், அவர்களது குடும்பத்தினரிடையே மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்துகிற வகையில் மத்திய பாஜக அரசு இதுவரை இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜக எம்.பியின் குற்றசாட்டு; மஹுவா மொய்த்ரா பதிலடி; எம்.பிகளின் லாகின் விவரங்களை வெளியிட கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details