சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் அதிக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்தது.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட் காய்கறிச் சந்தைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 1000 டன் காய்கறிகள் சுமார் 100 லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மழை மற்றும் சாலையில் தேங்கிய மழை நீர் காரணமாக மற்ற வியாபாரிகள் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரவில்லை எனவும், காய்கறி விநியோகம் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதாக கோயம்பேடு வியாபாரிகளால் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாலைகளில் தேங்கிய மழை நீர் அகற்றியப் பின்பு கோயம்பேடு மார்க்கெட் காய்கறிச் சந்தையில் வியாபாரம் சீராகும் என மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தாம்பரம் மார்க்கெட் நிலவரம்: சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளதாக பொதுமக்களால் கூறப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் சென்று காய்கறிகளை வாங்குவதற்கு போக்குவரத்து இல்லாததால் காய்கறிகள் விலை சிறிது உயர்ந்துள்ளதாக தாம்பரம் மார்க்கெட் வியாபாரிகளால் கூறப்படுகிறது.