தமிழ்நாடு

tamil nadu

105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள் தயாரித்த ஏஜென்ட் கைது- வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

By

Published : Aug 5, 2023, 4:23 PM IST

Updated : Aug 5, 2023, 4:35 PM IST

போலி பாஸ்போர்ட் தயார் செய்து 100 க்கும் மேற்பட்டோரை வெளிநாட்டிற்கு அனுப்பிய முக்கிய ஏஜென்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள் தயாரித்த ஏஜெண்ட் கைது: இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்!
105 பாஸ்போர்ட்டுகள், போலி ஆவணங்கள் தயாரித்த ஏஜெண்ட் கைது: இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்!

சென்னை:போலி பாஸ்போர்ட்கள் மூலம் மக்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்த ஏஜென்ட்களில் முக்கிய ஏஜென்ட்டான திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி, மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி இந்தியாவை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மலேசியா நாட்டிற்கு செல்வதற்காக முயற்சி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு உள்ளார்.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலி பாஸ்போர்ட் சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி புலனாய்வு பிரிவு, வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக மலேசியாவில் வேலை செய்த போது ஒரு சில காரணத்தினால் மலேசியாவிற்கு செல்ல தடைவிதித்து அந்நாட்டு அரசாங்கம் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி உள்ளனர்.

பின்னர் அந்தோணி மீண்டும் மலேசியா செல்ல முடியாமல் தவித்த போது பெரோஸ் கான் என்பவரின் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவர் அளித்த தகவலின் பேரில் அந்தோணி, சையது அபுதாஹிரிடம் சென்றுள்ளார். அவர் ஆண்டனி சாமி என்ற பெயரை மாற்றி போலியாக ஆதார் கார்டு தயார் செய்து அதன் மூலமாக போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுத்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த போலி பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு மலேசியா செல்ல முற்பட்ட போது சென்னை விமான நிலையத்தில் அந்தோனி சாமி பிடிபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர் அந்தோனி சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இவ்வழக்கில் போலி பாஸ்போர்ட் தயார் செய்யும் ஏஜென்டுகளை பற்றிய தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முக்கிய நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது பெரோஸ்கான் (45) என்பவரை கடந்த ஆகஸ்ட் 3 அன்று கைது செய்து விசாரணை செய்தனர்.

இதையும் படிங்க: பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: திமுக உறுப்பினர் கைது!

விசாரணையில் பெரோஸ் கான் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் தயார் செய்து அதன் மூலம் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வெளிநாடுகளுக்கு, தகுதியில்லாத நபர்களை பணம் பெற்று கொண்டு அனுப்பி வைத்தது தெரியவந்தது.

மேலும் பெரோஸ் கானுக்கு உடந்தையாக புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த மற்றொரு போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் சையது அபுதாஹிர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் தஞ்சாவூர் மற்றும் மலேசியாவில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரி ஒருவரை கையில் வைத்துக்கொண்டு போலியான பாஸ்போர்ட் மூலமாக பலரை வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில் பெரோஸ்கான் மற்றும் சையது அபதாஹிர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அதில் மொத்தம் சுமார் 105 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் போலி ஆவணங்கள், இந்திய அரசு மற்றும் வெளிநாட்டு ஆவணங்களில் பயன்படுத்துவதைப் போன்று போலியான அரசாங்க மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர் முத்திரைகள், அதை தயாரிக்கும் உபகரணங்கள், கணினிகள், பணம் 57,000 ஆயிரம், சிங்கப்பூர் டாலர் 1000, தாய் பட் 15500, மலேசியன் ரிங்கிட் 25 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெரோஸ்கான் விசாரணைக்குப் பின்னர் நேற்று (ஆகஸ்ட் 4ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். போலி பாஸ்போர்ட் மூலமாக எத்தனை பேரை இந்த கும்பல் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்பி உள்ளனர் என்பது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏஜெண்டுகள் மூலமாக பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக உஷாராக இருக்குமாறும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தபட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெறுமாறும் சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க: கட்டைப் பையால் சிக்கிய பலே பைக் திருடன்.. சென்னையில் நடந்தது என்ன?

Last Updated :Aug 5, 2023, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details