தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்

By

Published : Aug 26, 2021, 8:01 PM IST

Updated : Aug 26, 2021, 8:08 PM IST

கே.டி.ராகவன் விவகாரத்தில் சர்ச்சையான காணொலியை வெளியிடக் கூறிய அண்ணாமலை ஒரு போலி சிங்கம் என ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்
மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்

சென்னை: முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் சர்ச்சைக்குரிய காணொலி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அண்ணாமலை போலி சிங்கம்; வீரமாகப் பேசிவிட்டு இப்போது பம்முகிறார் என ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டி மதன் ரவிச்சந்திரன் 40 நிமிட ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

மதன் ரவிச்சந்திரனின் தன்னிலை விளக்கம்:

முன்னாள் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தொடர்பான காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யு-ட்யூப் சேனல் முடக்கம் செய்யப்பட்டு, அவர் பாஜகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஒரு தன்னிலை விளக்கத்தை மதன் ரவிச்சந்திரன் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.

போலி சிங்கம் அண்ணாமலை:

அதில், 'தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தைரியம் இல்லாமல், காணொலியை வெளியிடக் கூறியது அண்ணாமலை தான்' என மதன் ரவிச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் அண்ணாமலை சிங்கம் அல்ல; போலி சிங்கம் என இன்று (ஆக.26) வெளியிட்டுள்ள ஆடியோவில் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையிடம் 3 முறை கே.டி.ராகவனின் காணொலியைக் காட்டி நடவடிக்கை எடுக்கக் கூறியதாக மதன் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

'ஒருவரின் 40 வருட அரசியலை அறுத்து எறியப் போகிறீர்கள்' என்று அண்ணாமலை கூறியது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

"பாஜக பெண்களே பாதிக்கப்பட்டிருந்தாலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க எனக்குத் தைரியம் இல்லை. நடிகைகள் குஷ்பு மற்றும் காயத்ரி ராகுராம் ஆகியோருடன் தனியாகப் பேசமாட்டேன். என்னுடைய அலுவலக கதவு எப்போதும் திறந்திருக்கும். அறையில் சிசிடிவி கேமரா உள்ளது" என அண்ணாமலை அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

குறிப்பாக வெண்பா கீதாயனிடம் பாதுகாப்பாக இருக்கும்படி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதனுக்கு எம்.எல்.ஏ சீட்டு

ஆடியோ பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிந்த அண்ணாமலை, மதன் ரவிச்சந்திரனிடம், "உங்களுக்கு என்று ஒரு தனித்திறமை இருக்கிறது. பாஜகவில் பெரிய அளவிற்கு சாதிக்க இடம் உள்ளது.

உன்னை மாவட்டச் செயலாளராக நியமித்து வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகிறேன். மாவட்டச் செயலாளர்களுக்குகீழ்தான் அனைத்துப் பிரிவுகளும்" எனப் பேசியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜனிடம் அலைபேசியில் கேட்டபோது, "இதற்கான விளக்கத்தை தலைவர் அண்ணாமலை தருவார்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு எதிராக மதனின் புதிய ஆடியோ - பரபரப்பு தகவல்

Last Updated : Aug 26, 2021, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details