தமிழ்நாடு

tamil nadu

சென்னை எல்ஐசி கட்டடம் பாதுகாப்பாக உள்ளதா?: ஆய்வு செய்த தீயணைப்புத்துறையினர் கூறிய அதிர்ச்சித் தகவல்!

By

Published : Apr 3, 2023, 6:54 PM IST

சென்னையில் எல்ஐசி கட்டடத்தில் நேற்று (ஏப்ரல் 2) தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Fire fighters LIC Building
தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை:சென்னை அண்ணா சாலையில் 15 தளங்கள் கொண்ட எல்ஐசி கட்டடம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் அடையாளமான இக்கட்டடத்தின் மேல்பகுதியில், எல்இடி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், மின்கசிவு ஏற்பட்டு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிற இடங்களுக்குப் பரவாமல் தீ அணைக்கப்பட்டதால் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் எல்ஐசி கட்டடத்தில் இன்று மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 15 தளங்கள் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், தீயைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் எளிதான முறையில் தீயை அணைக்கும்படி கட்டடம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், அவசர கால தீயணைப்புக் கருவிகள் சரியான முறையில் இயங்குகிறதா எனவும் சோதனை செய்து பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன், "தீயணைப்புத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் உத்தரவின்பேரில் எல்ஐசி கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் என்பதால், தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டியுள்ளது.

எல்ஐசி கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக இல்லை. படிப்படியாக அமல்படுத்தி வருகின்றனர். குறைகளை நிவர்த்தி செய்ய தீயணைப்புத்துறை சார்பாக சில அறிவுரைகளை வழங்கி உள்ளோம். 15 தளங்கள் கொண்ட கட்டடத்தின் தரைத்தளம் உட்பட சில இடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் உள்ளன. அதை சுட்டிக்காட்டியதால், உடனடியாக சரி செய்வதாக எல்ஐசி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்" என்றார்.

சென்னை நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும், எல்ஐசி கட்டடத்தை முறையாக பாதுகாக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாது" - டிகேஎஸ் இளங்கோவன்!

ABOUT THE AUTHOR

...view details