தமிழ்நாடு

tamil nadu

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா : துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 1:51 PM IST

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

Ayodhya Ram Temple Kumbhabhishekham
அயோத்தி ராமர் கோயில் விழா

சென்னை: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தொடக்க விழா ஜன.22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இதனை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும் ஜனவரி 22ஆம் தேதி அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான ராமர் சிலை வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.

தற்போது துர்கா ஸ்டாலினை விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் தலைமையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பிரகாஷ், ராம ராஜேஷ், சுதர்சன் உள்ளிட்டோர் சந்தித்து அயோத்தி ராமஜென்ம பூமியில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள சிலை பிரதிஷ்டை விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் அவரிடம் வழங்கினர்.

பின்னர் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளை சார்பாக அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றோம்.

துர்கா ஸ்டாலின் எங்களை அவர் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையும் நாங்கள் கொடுத்தோம். அவரும் பக்தியுடன் அதனைப் பெற்றுக்கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்தார்கள்" எனக் கூறினார்.

மேலும் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை சார்பில், சென்னையில் உள்ள அமிர் மஹாலில் உள்ள ஆற்காடு வம்சத்தினரை சேர்ந்த நவாப் முகம்மது அப்துல் அலி மகன் ஆசிப் அலிக்கு ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கலை துறையினர்களான, ரஜினிகாந்த், குஷ்பு, ராகவா லாரன்ஸ், சந்தானபாரதி, ஓய்.ஜி. மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ராமர் கோயிலுக்கான அழைப்பிதழ் வழங்குவதற்காக மு.க.ஸ்டாலினிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஒரு குடும்பத்திருக்கும் சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் தரப்பில், "பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தான் இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி முன்னதாக தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ராமர் கோயிலை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 44 சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்படவுள்ளன. ஜனவரி 25ஆம் தேதிக்குப்பின் மார்ச் மாதம் வரை ஒவ்வொரு மக்களவை தொகுதியிலிருந்தும் சுமார் 10 ஆயிரம் பேரை அயோத்திக்கு அழைத்து வர பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமத்துவ பொங்கல் விழா: அதிகாரிகளுடன் மாட்டுவண்டியை இயக்கிய தென்காசி டிஎஸ்பி!

ABOUT THE AUTHOR

...view details