சென்னை: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தொடக்க விழா ஜன.22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இதனை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. மேலும் ஜனவரி 22ஆம் தேதி அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான ராமர் சிலை வைக்கப்படுகிறது.
இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
தற்போது துர்கா ஸ்டாலினை விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் தலைமையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பிரகாஷ், ராம ராஜேஷ், சுதர்சன் உள்ளிட்டோர் சந்தித்து அயோத்தி ராமஜென்ம பூமியில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள சிலை பிரதிஷ்டை விழா அழைப்பிதழை கொடுத்து அழைப்பு விடுத்தனர். ராமருக்கு பூஜை செய்த அட்சதையையும் அவரிடம் வழங்கினர்.
பின்னர் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலினை ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ர அறக்கட்டளை சார்பாக அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றோம்.
துர்கா ஸ்டாலின் எங்களை அவர் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையும் நாங்கள் கொடுத்தோம். அவரும் பக்தியுடன் அதனைப் பெற்றுக்கொண்டு விரைவில் தரிசனம் செய்ய வருவதாக தெரிவித்தார்கள்" எனக் கூறினார்.