தமிழ்நாடு

tamil nadu

கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயம் - ஜிபிஎஸ் உதவியுடன் குளத்தில் தேடும் பணி தீவிரம்

By

Published : Mar 29, 2022, 7:18 AM IST

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன சிலையை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கோயில் தெப்பக்குளத்தில் தேடி வருகின்றனர்.

மாயமான சிலையை குளத்தில் தேடும் பணி தீவிரம்
மாயமான சிலையை குளத்தில் தேடும் பணி தீவிரம்

சென்னை:கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அங்குள்ள புன்னைவன நாதர் சன்னதியில் இருந்த புராதன மயில் சிலை திருடப்பட்டு, அதற்குப் பதிலாக வேறொரு மயில் சிலை மாற்றி வைக்கப்பட்டதாகவும், உண்மையான சிலை திருடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விவகாரம் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிலை மாயமான விவகாரம் தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டது. மேலும், 6 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மாயமான சிலையை குளத்தில் தேடும் பணி தீவிரம்

சிலை தேடும் பணி தீவிரம்:இந்நிலையில் ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மை வாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கும் முறை உள்ளது. அதேபோல திருடுபோன தொன்மை வாய்ந்த மயில் சிலை மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தெப்பக் குளத்தில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்றது. அன்று நடைபெற்ற தேடுதல் பணியில் இரட்டை நாக சிலை ஒன்றும், கல்லால் ஆன விநாயகர் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உதவியுடன், மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தொன்மை வாய்ந்த மயில் சிலையை தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (மார்ச் 28) ஈடுபட்டனர்.

ஜிபிஎஸ் உதவியுடன் சிலைகள் தேடல்:தீயணைப்புத் துறையினர் மூலம் ஸ்கேனர் ஜிபிஎஸ் கருவிகளைக் கொண்டு சிலையைத் தேடும் பணிகள் நடைபெற்றது.தெப்பக் குளத்தினுள் சுமார் 4 படகுகளைப் பயன்படுத்தி குளத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள ஆழத்தை அளவிடும் பணியில் தீயணைப்பு மீட்புப் படையினர் ஈடுபட்டனர். நீச்சல் பயிற்சி பெற்ற ஸ்கூபா வீரர்கள் குளத்துக்குள் இறங்கி குளத்தின் ஆழத்தில் சிலை உள்ளதா என தேடும் பணியை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய கடல்சார் தொழிற்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உதவியுடன் குளத்தின் ஆழத்திற்கு ஏற்றார்போல் தகுந்த ஜி.பி.எஸ் உள்ளிட்ட ஸ்கேனர் தொழிற்நுட்பக் கருவிகளைக் கொண்டும் சிலை குளத்தினுள் உள்ளதா என தேடும் பணியை மேற்கொண்டனர். நேற்று முழுவதும் சிலையை தேடும் பணிகள் நடைபெற்றதால், இன்றும் சிலை தேடும் பணிகள் நிறைவடைந்த பிறகே குளத்திற்குள் தொன்மை வாய்ந்த மயில் சிலை உள்ளதா? இல்லையா? என்ற விவரம் தெரியவரும்.

இதையும் படிங்க:சிவகங்கையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details