தமிழ்நாடு

tamil nadu

மருத்துவர் தற்கொலை வழக்கு: கணவருக்கு சிறைத் தண்டனை உறுதி

By

Published : Feb 9, 2022, 9:00 AM IST

பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மருத்துவர் மரியானோ ஆண்டோ புருனோவுக்கும், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர் அமலி விக்டோரியாவுக்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அயனாவரம் பகுதியில் வசித்துவந்த இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் அமலியைத் துன்புறுத்தியுள்ளனர்.

2007ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த அமலி, பிரசவத்துக்குப் பின் கணவர் வீடு திரும்பியபோது, அவரை வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்தியதுடன், அவரது பெயரில் உள்ள சொத்துகளை எழுதிவைக்கச் சொல்லி சித்ரவதை செய்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அமலி, 2014 நவம்பர் 5ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வரதட்சணை கொடுமை

இதையடுத்து, மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள், தந்தை ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின்கீழ் அயனாவரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மருத்துவர் அமலியின் கணவர், மாமியார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருவருக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தந்தை விடுதலை செய்யப்பட்டார்.

மருத்துவர் தற்கொலை

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆன்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும், ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வற்புறுத்தியுள்ளதாகவும், அனைத்து ஆதாரங்களையும் காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

கணவருக்கு சிறைத் தண்டனை

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆதாரங்களிலிருந்து மருத்துவர் தற்கொலைக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கருதுவதால் அவரது தற்கொலைக்கு காரணமான மனுதாரர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதிசெய்வதாகக் கூறி, மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடிசெய்தார்.

மேலும், மீத தண்டனையை அனுபவிக்கும் வகையில் இருவரையும் மீண்டும் சிறையில் அடைக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:மியான்மர்-இலங்கைக்கு சென்னை வழியாக போதைப்பொருள் கடத்திய 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details