தமிழ்நாடு

tamil nadu

அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் முழு லிஸ்ட்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 4:48 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 45 இடத்தில் கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 2 இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் வெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை
தமிழகம் மற்றும் புதுவையில் வெளுத்துவாங்கும் வடகிழக்கு பருவமழை

சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றம் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 26ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழலுக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (நவ.23) சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "நேற்று தமிழ்நாடு பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து இன்று(நவ.23) கேரள பகுதிகள் மீது நிலவி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளதையடுத்து, பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்துள்ளது. 45 இடங்களில் கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், இரண்டு இடங்களில் அதிக கனமழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு பகுதிகள்:அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 37செ.மீ. மழையும், கோத்தகிரியில் 24 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அடுத்து வரக்கூடிய மூன்று தினங்களை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவுகள், கேரள கடற்கரை பகுதிகளில் இன்று(நவ.23) சூறாவளி காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 52 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

மேலும் 26 ஆம் தேதி தெற்கு மற்றும் அதையொட்டியுள்ள வடக்க அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், 27ஆம் தேதி வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் அவ்வப்போது 67 கி.மீ., வேகத்தில் வீசப்படும். எனவே மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கின்ற மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இயல்பை விடக் குறைவாக பதிவான மழைப்பொழிவு:தொடர்ந்து தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் அக்டோபர் 1 முதல் இன்று(நவ.23) வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 28 செ.மீ.,ஆக பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 32 சென்டிமீட்டராக இருக்கவேண்டிய நிலையில் தற்போது 10% இயல்பை விட குறைவாக பதிவாகியுள்ளது" என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீலகிரியில் கனமழையால் சாலையில் மண் சரிவு.. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே போக்குவரத்து பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details