தமிழ்நாடு

tamil nadu

அரசு கலை கல்லூரிகளில் 31,488 இடங்கள் நிரம்பவில்லை.. 3-ஆம் சுற்று கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

By

Published : Jun 20, 2023, 8:21 PM IST

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், 31 ஆயிரத்து 488 இடங்கள் காலியாக உள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Higher education dept
உயர் கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. மேலும் 1 லட்சத்து 7ஆயிரத்து 299 இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு நடத்தப்பட்ட முதல் மற்றும் 2ம் சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்ற முடிந்த நிலையில் 31 ஆயிரத்து 488 காலியாக உள்ளன. தற்போது மாணவர்களை விட மாணவிகள் 12 ஆயிரத்து 569 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர். மேலும் 31621 மாணவர்களும், 44190 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரியிலும் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் சேர்க்கைக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் 21000 சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மே 8 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது.

இதில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ் மொழி பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல்முறையாக அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வுச் செய்த பின்னர் வேறு கல்லூரியில் சேர்வதை தவிர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் கல்லூரி கல்வி இயக்குனரின் இணையதளத்தில் இருந்து அனுமதி கடிதம் பெற்ற பின்னர் தான் சேர்க்கை நடத்தப்பட்டது.

இந்தக் கலந்தாய்வின் மூலம் 40 ஆயிரத்து 287 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் 15 ஆயிரத்து 34 மாணவர்கள், 25 ஆயிரத்து 253 மாணவிகள். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 10,918 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.

முதல் கட்ட கலந்தாய்வு மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 31621 பேரும், மாணவிகள் 44190 பேரும் சேர்ந்துள்ளனர்.

மூன்றாம் சுற்று கலந்தாய்வு:

இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி வாயாக மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பித்து அந்த கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்களின் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் தொடர்ந்து அழைக்கப்பட்டு மூன்றாம் சுற்று கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும்.

கலந்தாய்வில் அனைத்து இடங்களும் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கூடுதலாக இடங்கள் தேவைப்பட்டால் கலை பிரிவில் உயர் கல்வித்துறை மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்து அளிக்கும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22 ஆம் தேதி முதல் துவங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: TNPSC: குரூப் 4 காலி பணியிடங்கள் 10,219ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details