தமிழ்நாடு

tamil nadu

அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை உத்தரவு!

By

Published : Jun 22, 2023, 10:58 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவு
அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 மாணவர்களை சேர்ப்பதற்கு உயர் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை இந்த இடங்களில் 75 ஆயிரத்து 811 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து ஜூன் 30ஆம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அந்தந்த கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களை அழைத்து அவர்களுக்கு இன வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. 2022 - 2023ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி 1 பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு 2 ஆயிரத்து 423 கௌரவ உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் கௌரவ விரிவுரையாளர்களாக ஏற்கனவே பணிபுரிந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியற்றவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் தகுதியான கௌரவ உதவிப் பேராசிரியர்கள் விதிமுறைகளின்படி, கல்வித் தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்தனர்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி ஒன்றில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் நிரந்தரப் பேராசிரியர்களை நியமனம் செய்யப்படும் வரையில் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில், தற்காலிக அடிப்படையில் 2 ஆயிரத்து 423 கௌரவ விரிவுரையாளர்கள் அரசால் ஆண்டுதோறும் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்பொழுது 2023 - 2024ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 318 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 1381 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்து உள்ள கல்வித் தகுதி மற்றும் பிற உரிய விதிகளின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 11 மாதங்கள் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்கள், தங்களது பணிக் காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ இறப்பு அல்லது இதர காரணங்களின் அடிப்படையில் காலிப் பணியிடம் உருவாகும் போதோ பணியிடத்தினை அரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்ப வேண்டும்.

அரசு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற அடிப்படையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் 5 ஆயிரத்து 699 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு உயர் கல்வித்துறை அனுமதி வழங்குகிறது. இவர்களுக்கு 11 மாதத்திற்கு மாதம் 20 ஆயிரம் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ஆளுநரை தூக்கி எறியும் நாள் வெகு விரைவில் இல்லை - ஆ.ராசா ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details