தமிழ்நாடு

tamil nadu

பழனி கோயில் கருவறை புகைப்படங்கள் வெளியானது எப்படி? அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 7:19 AM IST

palani dhandayuthapani murugan temple: கோயில் கருவறை புகைப்படங்கள் வெளியானது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் வெளியானது தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்து இருந்தார். இது குறித்து கோயில் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி பழனி தண்டாயுதபாணி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து ஆஜராகி, கோயிலுக்குள் செல்போன்களை கொண்டு சொல்லக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளதாக விளக்கம் அளித்தார். கோயில்களுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில், அதை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் திருப்பதி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாததை சுட்டிக்காட்டி, அதைப் போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுத்து, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பழனி கோயிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளது என்பது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் (செப் 01) அறிக்கை தாக்கல் செய்யவும், கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: நடிகர் சிம்பு ரூ.1 கோடிக்கன உத்தரவாதத்தை செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details