தமிழ்நாடு

tamil nadu

எண்ணூர் கிரீக் பகுதி எண்ணெய் கசிவு: விரைந்து அகற்றும் பணியில் 75 படகுகள் மற்றும் 4 கல்லி சக்கர் இயந்திரங்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:42 PM IST

Ennore oil spill: எண்ணூர் கிரீக் பகுதி எண்ணெய் கசிவை விரைந்து அகற்றுவதற்கு 4 கல்லி சக்கர் இயந்திரங்கள், 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:மிக்ஜாம் புயலின் போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் வெள்ளத்தின் நடுவே எண்ணெய் கழிவுகள் கசிந்த சம்பவம் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு மற்றொரு துயரமான விஷயமாக இந்த எண்ணெய் கசிவு இருந்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் மண்வளம் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடுஎண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் இன்று (டிச.13) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும், சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின்(CPCL) அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

எண்ணூர் கிரீக் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளையும், பாதிக்கப்பட்ட கிராமங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. தற்போது, அப்பகுதியில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எண்ணெய் பரவுவதைக் தடுப்பதற்காக பூமர்கள் (Boomers) வைக்கப்பட்டுள்ளன.

கிரீக்கிலிருந்து எண்ணெய் எடுப்பதற்காக எண்ணெய் ஸ்கிம்மர் இயந்திரம் இன்று பயன்படுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில் மேலும் நான்கு எண்ணெய் ஸ்கிம்மர்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை விரைவுபடுத்திட, 75 படகுகள் மற்றும் 300 பணியாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படகுகள், தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து எண்ணெயை உறிஞ்சி பாதுகாப்பாக கரைக்குக்கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்பரப்பில் இருந்து எண்ணெயை உறிஞ்சுவதற்கு நான்கு கல்லி சக்கர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜே.சி.பி மற்றும் பிற சாதனங்களைக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து எண்ணெய் படிந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் பூமர்கள், ஸ்கிம்மர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் அகற்றும் பணிகளை மேலும் விரைவுபடுத்திட சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு (CPCL) உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய நடமாடும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு முகாமையும் ஏற்பாடு செய்துள்ளது.

வனத்துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் கண்காணிப்புக் குழுக்கள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், எண்ணெய் அகற்றும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு தக்க அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

எண்ணெய் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உறுதிப்படுத்துமாறு சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு (CPCL) உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு பாதுகாப்பு கியர் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் இந்நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் முதலான விவரங்களை நிவாரண ஆணையரிடம் வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மீன்வளத்துறையின் இயக்குநர் ஆகியோருக்கு எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், இத்தகையை எண்ணெய் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறி மழைவெள்ளத்தில் கசிந்த கழிவுகள் அதிக நச்சுத்தன்மை உள்ளவை என்றும், இதனால் பொதுமக்களுக்கு பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்; பல்லுயிர் இழப்புகள் விரைந்து மதிப்பீடு செய்யப்படும் - சுப்ரியா சாகு தகவல்

ABOUT THE AUTHOR

...view details