சென்னை: முதுகலைப் பொறியியல் படிப்பு எம்.இ., எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 3ஆம் தேதிமுதல் பிப்ரவரி 1ஆம் தேதிவரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2021-22ஆம் கல்வியாண்டில் சேர்வதற்கான தேர்வு நடத்தப்பட்டது.
மேலும் கேட் நுழைவுத்தேர்வு எழுதி தகுதிபெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றது. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சிக்கல் காரணமாக நடப்பாண்டில் முதுகலைப் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை காலதாமதமாகத் தொடங்கவுள்ளது.
7,525 காலி இடங்கள்
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 732 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம் ஆயிரத்து 453 மாணவர்கள் என இரண்டாயிரத்து 185 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
அதேபோல் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கேட் தேர்வின் மூலம் 624 இடங்களும், தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வின் மூலம் 824 மாணவர்கள் என ஆயிரத்து 448 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் ஆறாயிரத்து 977 இடங்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 610 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக மூன்றாயிரத்து 85 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.