தமிழ்நாடு

tamil nadu

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 2:27 PM IST

DMK MP Gautama Chikamani case: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஆஜரான திமுக எம்.பி கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு, வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கி, விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி
சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி

சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையினர் அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியதுடன், இருவரிடமும் தனித்தனியாக விசாரணையும் நடத்தினர்.

அதன் முடிவில், செம்மண் அள்ளியதில் முறைகேடு செய்ததன் மூலம் கிடைத்த பணத்தை, ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பணம் பறிமுதல் செய்தனர். மேலும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடுகளை முடக்கி, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கௌதம சிகாமணி, அவரது உறவினர்கள் கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த வழக்கு, கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (நவ.24) விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கௌதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரும் நேரில் ஆஜராகினார். அதனை அடுத்து, குற்றப்பத்திரிகை நகல்களை அவர்களுக்கு வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆளும்கட்சியினரை வட்டமிடும் அமலாக்கத்துறை.. எம்பி கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை!

ABOUT THE AUTHOR

...view details